அரசியல் வட்டத்துக்குள் முடக்கப்பட்ட தமிழ் சினிமாவும், மழுங்கிப் போகும் கலைஞர்களின் திறமைகளும்

கடந்த சில மாதங்களாக வெளிவந்த வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்த படங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது மற்றவர்கள் தயாரித்து அவர்களால் வெளியிடப்பட்டவை. அவர்களோடு தொழில் ரீதியாக மோத முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். தமிழத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலரே கைப்பற்றியதுதான் காரணம். சினிமா பெரும் முதலீட்டில் உருவாக்கப்படுகிறது என்பதால் அதன் வெற்றி என்பது விமர்சனங்கள், விருதுகள், அனைத்தையும் தாண்டி வியாபாரத்லும் இருக்கிறது.

ஏற்கனவே இருந்த திருட்டு வி சி. டி. பிரச்சினையைக் காட்டிலும், தற்போது படம் வெளியாகும் நாளிலேயே இணையத்திலும் வெளிவந்து விடுவது படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்துவிடுகிறது.

இதற்கிடையில் ரிலீஸான ஒரு வாரத்திற்குள்ளேயே போட்ட முதலை எடுக்க நினைப்பது சாமர்த்தியமான வியாபாரம்தான்.

ஆனால் அதே நேரத்தில் பெரும் முதலீட்டில் படம் எடுக்க வாய்ப்புள்ளவர்கள் ஏற்கனவே பிரபலமான இயக்குனர்களையும், நடிகர்களையும் வைத்தே படம் எடுத்து வருகிறார்கள்.

ஓடும் குதிரை மீது தான் மட்டுமே பணம் கட்டுவேன் என்பது நல்ல வியாபார தந்திரமாக இருக்கலாம். ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் அதையும் விஞ்சும் குதிரைகள் கவனிக்க ஆளில்லாமல் இருக்கின்றன. அவற்றின் மீதும் கொஞ்சம் கருணைக் கண் காட்டலாம்.

பிரபலமான இயக்குநர்கள் பிரபலமான நடிகர்களை வைத்து எடுத்த படங்கள் சுமாராக ஓடிக் கொண்டிருக்கையில் இடையிடையே சில புதிய இயக்குநர்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களை எடுத்து வெற்றிபெற்றும் இருக்கிறார்கள்.

வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ்த் திரைப்படத்தின் முகத்தையே மாற்றிவிடும் அளவுக்கு திறமைகொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கோடம்பாக்கத்தில் கண்களில் கனவுகளோடும் கையில் பைலோடும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாய்ப்பளிக்க யாராவது தயாரிப்பாளர்கள் முன்வந்தாலும் அதைத் தியேட்டரில் வெளியிட முடியாது என்பது எவ்வளவு கொடுமை.

சினிமா வியாபாரம் மட்டுமில்லை. கதை, ஓவியம், ஒப்பனை, இசை, பாடல், நடனம் என்று சகல கலைகளும் ஒன்றுசேரும் அபூர்வ கலைவடிவம். பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் படத்தின் வசூல் அல்ல, அதன் தரம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

இன்னும் தமிழ் சினிமா பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதை வெறும் வியாபாரமாகவே சுருக்கிவிட வேண்டாம்.

படம் தயாரிக்கவும் விநியோகிக்கவும் வெற்றி பெறவும் வாய்ப்பு வசதியுள்ளவர்கள் லாபத்திற்காகவே படம் எடுக்கட்டும். ஆனாலும் நல்ல படங்களாய் பரிசோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுப்பதாய் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாய் ஒன்றிரண்டு படங்களையாவது தயாரிக்கலாம்.

நல்ல படங்கள் வெற்றிபெறாமல் போவதற்குக் காரணம் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகள்தான். அதைச் சமாளிக்கும் செல்வாக்கு உள்ளவர்கள் தங்களுடைய பங்காய் தமிழ் சினிமாவுக்கு இந்த சேவையை மன முவந்து செய்யலாம்.

மணவை அசோகன்