Contact us at: sooddram@gmail.com

 

அதிகார அரசியலில் மீள்பிரவேசம் செய்யும் சந்திரிகா, மகிந்த?

எதிர்வரும் தேர்தலில் சந்திரிகா மற்றும் மகிந்தர் பங்கெடுப்பர் என பரவலாக பேசப்படுகிறது. இல்லை என இருவரும் அறுதியிட்டு கூறவில்லை. இலைமறை காயாக எதுவோ நடக்கிறது. முடிவு தெரியும்வரை ஊகங்களும் வதந்திகளும் ஊடகங்களுக்கு தீனிபோடும். உண்மையில் அவ்வாறு நடந்தால் முன்பு அவர்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதனால் நிகழ்ந்தவை பற்றி ஆராயவே இந்த கட்டுரை. அதனை அண்மையில் பதவி இழந்த மகிந்தரில் ஆரம்பிக்கிறேன்.
2005 ல் மிகுந்த உள்கட்சி போராட்டத்தின் ஊடாகவே சந்திரிகாவின் மனப்பூர்வமான விருப்பமின்றி ஜனாதிபதி வேட்பாளராக மகிந்தர் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே சந்திரிகா மகிந்தர் இடையி ல் உள் புகைச்சல் இருந்து வந்தது. இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது யு என் பி யில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தவர்கள் இவர்களின் தந்தைகளான பண்டா - ராஜபக்ச எனும் விடயம்தான்.

அரசியலை பொறுத்தவரை எப்படி பார்த்தாலும் முதலில் செயல்பட தொடங்கியவர் மகிந்தர் தான். மிக இளவயதில் அவர் பாராளுமன்றத்துள் பிரவேசித்தது மட்டுமல்ல சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் நிலைத்து நீடித்தவர். 1977 தேர்தலில் மட்டுமே அவர் தோற்றுப்போனார். அதன் பின் மூன்றாவது முறை ஜனாதிபதியாகும் அவர் முயற்சியில் தான் தோற்கடிக்கப்பட்டார். மற்றப்படி அவர் அரசியல் வாழ்வு என்றும் ஏறுமுகமாகவே இருந்தது. மாறாக சந்திரிகா பிரபல நடிகரை மணமுடித்து பின் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையுடன் முரண்பட்டு ஆரம்பித்த கட்சியில் செயல்பட்டார். கணவரின் படுகொலையின் பின் அவர் உருவாக்கிய கூட்டுக்கு தலைமை தங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நாட்டைவிட்டு வெளியேறியவர் மீண்டும் வர சில ஆண்டுகள் சென்றன.

அந்த பிரேமதாசா யுகத்தில் நின்று நிலைத்து பல போரட்டங்களை முன்னின்று நடத்தியவர் மகிந்தர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடத்திய கதிர்காம யாத்திரையின் கதாநாயகன் அவர்தான்.
பிரேமதாசா படுகொலைக்கு பின் தான் சந்திரிகா புயல் வீசத்தொடங்கி அது மாகாணசபை பின் பாராளுமன்றம் அதன் பின் இரண்டு தடைவைகள் ஜனாதிபதி என அடித்து ஓய்ந்தது. ஆரம்பத்தில் கவர்ச்சி மற்றும் வாக்குகள் என்பன முன்னிலைப்படுத்த பட்டதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையும் சந்திரிகா வசம் போனது. ஸ்ரீமாவின் குடி உரிமை பறிக்கப்பட்டதால் அவர் கட்சியின் தலைவராக இருக்க முடியாது என மகிந்தர் அப்போது வாதிட்டதை தான் மீண்டும் கட்சிக்குள் வந்து தலைமை பதவி பெற்ற போதே மனதில் கொண்ட சந்திரிகா, தன் மந்திரி சபை நடவடிக்கைகளை பத்திரிகைகளுக்கு கசியவிடுகிறார் என மகிந்தர் மீது கடுப்பிலும் இருந்தார். அதனால் தான் அவரை ஒரு இனவாதி என அடையாளப்படுத்தி அவருக்கு ஜனாதிபதியாக வரும் வாய்ப்பை தடுக்க முதலில் கூட்டு கட்சிக்குள் முயன்றார்.

அந்த முயற்சிக்கு ஜே வி பி மற்றும் மங்கள சமரவீர மங்களம் பாடியதால் விருப்பமின்றி ஒத்துக்கொண்டாலும் அவரை தோற்கடிக்க பல உள்குத்து வேலைகள் செய்தார். தன் தம்பியின் மரணத்துக்கும் மகிந்தர் கொடுத்த மன அழுத்தம் காரணம் என கூறியவர்
அவர் தம்பி அனுராவின் பள்ளித்தோழனான ரணில் வெற்றியடைய மறைமுகமாக செயல்பட்டார். வடபகுதி வாக்குகள் மகிந்தருக்கு போக கூடாது என்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவை சம்மதிக்க வைக்க அவரது ஆலோசகராக இருந்த விக்னேஸ்வரனுக்கு ஆளுநர் பதவி தருவதாக ஆசைகாட்டினர்.

டக்ளஸ் அவரது ஆலோசனையை ஏற்காததால் பத்துவருடங்கள் அவரிடம் பல லட்சம் சம்பளம் இதர வசதிகளை பெற்றுவந்த ஆலோசகர் தன் பதவியை இழந்தார். டக்ளஸ் மகிந்தவை வரவேற்க யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு மக்களை போகவிடாமல் இராணுவத்தின் உதவியுடன் சந்திரிகா தடுத்தார். இருந்தாலும் ஒரு பாடசாலையில் கூடிய மக்கள் கூட்டம் மகிந்தவுக்கு ஆதரவு கரம் நீட்ட அந்த காட்சிகள் தொலைகாட்சி மூலம் தென்னிலங்கையில் காட்டப்பட்டு அது அவரின் வெற்றிக்கு உரமூட்டியது.

பச்சோந்திகளான கூட்டமைப்பின் சதியை முறியடிக்க மகிந்தவின் சகாக்கள் புலிகளிடம் விலை பேசினார். பலகோடிகள் கைமாறிய பின் புலிகள் வடபகுதி மக்களை தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னார்கள். மகிந்தருக்கு விழக்கூடிய வாக்குகள் டக்ளஸ் மூலம் பெறப்பட ரணிலுக்கு விழக்கூடிய வாக்குகள் புலிகளுடன் மேற்கொண்ட பண பட்டுவாடவால் தடுக்கப்பட்டது. மகிந்தரின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியும் சந்திரிகாவின் படிப்படியான அரசியல் அஸ்தமனமும் ஆரம்பமாகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவி மகிந்தரிடம் சென்றது. தான் சிறுமைப் படுத்தப்படுவதாக கூறி மீண்டும் அவர் நாட்டைவிட்டு வெளியேற நாட்டின் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என மகிந்தர் தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.

2005 தொடக்கம் 2014 வரையான மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை இரண்டாக பிரித்து மகிந்தர் முதல் தடவை ஜனாதிபதியாக வந்தது முதல் அது முள்ளிவாய்க்கால் மக்கள் பேரவலமும் விடுதலை புலிகளின் தலைவருக்கு நந்திக்கடல் கதிமோட்சமும் இடம்பெற்ற காலமாகவும், அதன் பின் அடுத்த தடைவையும் ஜனாதிபதியாகி தொடர்ந்தும் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக வரமுற்பட்டு இயலாமல் அதிகாலையில் அலரிமாளிகையை விட்டு வெளியேறி தனது தங்காலை வீட்டுக்கு புறப்பட்ட காலம் என இரண்டாக பிரித்து பார்க்கவேண்டும்.

பண பட்டுவாடா செய்து புலிகளை தன் தேர்தல் வெற்றிக்காக வளைத்தவருக்கு அவர்களுடன் சமரசம் பேசும் தந்தரம் சரி வரவில்லை. புலிகள் ஆயுதத்தின் மீது மோகம் கொண்டவர்கள் சண்டைகோழிகள் என்பதை அவர்கள் முன்பு ஆரம்பித்து பின் முறித்துக்கொண்ட பேச்சுவார்த்தைகள் பற்றி தெரிந்திருந்தாலும் கூடியவரை தன்னை நிலை நிறுத்தும்வரை தன்பலவீனத்தால் மோதலை தொடங்க பயந்தார். புலிகளே தம் தலையில் தாமே மாவிலாறில் மண்ணை அள்ளிப்போட்ட அவர்களின் தண்ணீர் அரசியல் சர்வதேசத்தின் கண்டனத்துக்கு உள்ளானதும் மகிந்தர் அணி ஆட்டத்துக்கு தயார் ஆனது.

பல காரணிகள் புலிகளின் மீது சர்வதேச அழுத்தத்தை கொடுக்க அதன் பலனை மகிந்தர் தன் முப்படைகள் மூலம் அறுவடை செய்ய ஆயத்தமானார். பக்கத்து நாட்டின் பெரியண்ணனை திருப்தி படுத்த 13 + என்றார். அது நன்றாகவே வேலை செய்தது. உள்நாட்டிலும் அதிகார பரவலாக்கல் பற்றிய கலந்துரையாடல் செய்ய பல குழுக்களை அமைத்து ஆலோசனைகளை தருமாறு தமிழ் கட்சிகளை அழைத்தார். மகிந்தர் தீர்வை தரப்போகிறார் அதற்கு புலிகள் தடையாக இருப்பதால் அவருக்கான ஆதரவை அனைத்து தமிழ் கட்சிகளும் முன்கதவாலும் பின்கதவாலும் வழங்கின. சர்வதேசம், பக்கத்து நாட்டு பெரியண்ணன் கூடவே உள்நாட்டு கட்சிகளுடன் மேலதிகமாக தன்னுடன் நெருக்கமான் உறவை பேணும் நாடுகளிடம் இருந்தும் ஆதரவு ஆயுதம் மற்றும் கடனுதவி பெற்று பெரும் படை எடுப்பு நடத்தினார். அதுவரை எவராலும் வெல்ல முடியாதவர் என பெருமை பேசிய சூரியதேவன் மண்டை பிளந்து மண்ணில் சாய்க்கப்பட்டார். பிரபாகரனின் ஆணவத்தால் பிழையாக வழிநடத்தப்பட்ட போராளிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டன.

மகிந்தர் தனது முதலாவது ஜனாதிபதி காலத்தில் புலிகளை வென்றதை விட மிகவும் தன்னை பலப்படுத்த கூடிய தனக்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகளையும் செய்து முடித்தார்.
சகல கட்சிகளையும் தன் பதவி பணம் கைமாறு செய்து உடைத்தார். சில கட்சிகளை தன் கூட்டு சின்னத்தில் இணைத்தார். ஒருவகையில் பார்த்தால் அவர் தன்னிடம் விலை போனவர்களை வெற்றிலை போடவைத்தார். இதனால் பல கட்சிகள் தம் கட்சி சின்னத்தையே மறந்து தம் தனித்தன்மையை இழந்தன. எங்கும் மகிந்தர் எல்லாம் மகிந்தர் எனும் நிலையில் வெற்றிலை நீக்கமற நாடெங்கும் கொடிகட்டி பறந்தது.

பதவிக்கும் பணத்துக்கும் தம் தனித்தன்மையை இழந்தவர்கள் தான் இன்று மகிந்தரை மீண்டும் கொண்டுவர நுகேகொட முதல் இரத்தினபுரிவரை கூட்டம் போடுகிறார்கள். ஒரு சில கட்சிகள் தம் கட்சி சின்னத்தை தூசி தட்டி மீண்டும் பறக்கவிட முயல்கின்றனர். இன்று ஒரு கட்சியில் இருப்பவர் நாளை அதே கட்சியில் இருப்பாரா என கூறமுடியாத அடிக்கடி கட்சி மாறும் அரசியல் கலாசாரத்திற்கு தனது முதல் பதவிகாலத்தில் வித்திட்ட பெருமை மகிந்தரையே சாரும். புலிகளை வென்றவர் என்ற பெருமையுடன் இரண்டாவது ஆட்டத்தில் தன் இராணுவ தளபதியுடன் மோதி வென்றதால் மகிந்தரின் அரசியல் பயணம் சவால்களுக்கு அப்பால்பட்டது போன்ற நிலைமை தோற்றம் பெற்றது. அதில் இருந்து தான் அவரது அரசியல் மாறுபட தொடங்கியது. அதுவரை 13+ என கூறி பெரியண்ணனை மகிழவைத்த மகிந்தர் அதில் இருந்து பின்வாங்கினர். அழுத்தங்கள் வந்த போது சீனாவை நாடினார்.

மேற்குலகு தலையீட்டை ரஸ்யாவின் ஆதரவுடன் சமாளித்தார் ஆசியாவின் அதிசயமாக நாட்டை மாற்ற பாலங்கள் பெரும்தேருக்கள் நிலப்பரப்பில் செயற்கை துறைமுகம், அதிகம் பயணிகள் வராத விமானநிலையம் என யுத்தத்தால் நாட்டின் அழிவிற்கு வித்திட்ட இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேறு விடயங்களில் கவனம் செலுத்தினார். இது என்னதான் அதி உயர் பட்டாடை உடுத்தி ஆபரணங்கள் அணிந்து வந்தாலும் சீக்குப்பிடித்த தலைவாராத தீயில் கருகிய விகார முகம் கொண்ட பெண்ணை பார்ப்பது போல இருந்தது இலங்கை மாதாவின் ஏனைய பகுதிகள் எவ்வாறு அழகூட்டப்பட்டாலும் அதன் தலைப்பகுதி போரால் குண்டுமழை பொழியப்பட்டு சிதைக்கப்பட்டு இருந்ததை பார்த்தவர் நிலை.

வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் எல்லாம் பூரணத்துவப்படுத்த படவில்லை. கொடுக்கப்பட்ட விளம்பரத்தை விட நிறை வேற்றப்பட்டவை மிக மிக குறைவு. கிடைத்த நிதியை சுருட்டுவதற்கு என ஒரு கூட்டம் வளர்த்து விடப்பட்டது. பொங்கலில் பயறுபோல் ஒருசில செயல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பிரபாகரனிடம் இருந்து விடுவித்தவை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. மக்கள் வீடிழந்து காணிகளை இழந்து முகாம்களில் முடக்கப்பட்டனர். இத்தனைக்கும் இராணுவம் அவர்களின் வீடுகளை தம் முகாமாக்கியது. காணிகளை தமக்கான பயிர் செய் நிலங்களாக்கினர். கடல் தொழிலை கூட இராணுவம் தன் கட்டுப்பாட்டில் எடுத்தது. மக்கள் அடுப்பில் இருந்து நெருப்புள் விழுந்த நிலைக்கு வந்தனர்.

புலிகள் அழிந்ததால் கிடைத்த நிம்மதியை மக்கள் தேவையற்ற இராணுவ பிரசன்னத்தால் இழந்தனர். யுத்தம் முடிந்த பின் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகள் சமூகத்துடன் இணைந்தபின் இயன்ற வரை இராணுவத்தை குறைக்கும் எண்ணம் மகிந்த சிந்தனையில் இருக்கவில்லை. அடுத்த நாட்டை போரில் வென்ற மமதை கொண்ட மன்னன் மனநிலையில் தான் மகிந்தரும் செயல்பட்டார். உலகில் இது போன்று செயல்பட்டவர்கள் இறுதியில் சந்தித்த முடிவை அவர் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடனான நட்பும் அந்த நாடுகளில் அவர் பார்த்த ரசித்த விடயங்களும் அவரை ஆசியாவின் அதிசயமாக நாட்டை மாற்றும் கனவில் மிதக்க வைத்தது.

யுத்த வெற்றியின் நாயகன் ஒட்டுமொத்த நாட்டின் தலைவனாக கிடைத்த சந்தர்ப்பத்தை உள் இருந்தே கொல்லும் வியாதிக்கு வைத்தியம் பாராமல் தவிர்த்ததால் தவறவிட்டார். அதனால் தான் மூன்றாம் தடவை தேர்தலில் தனித்து களம் இறங்கி அரபுவசந்தம் இங்கும் ஏற்படாது என தன் உள்மன பயத்தை மேடை தோறும் முழங்கினர்.  அன்று யுத்தம் முடிவிற்கு வந்தபின் வடக்கின் நிர்வாகத்தை ஒரு இடைக்கால நிர்வாக சபைமூலம் அரசியல் தலைமைகளிடம் கொடுத்து படிப்படியாக அதிகார பரவலாக்கலை செயல்படுத்தி தேவையற்ற இராணுவ பிரசன்னத்தை குறைப்பதன் மூலம் மக்களின் காணிகளை மீளளித்து அவர்களை தம் சொந்த நிலங்களில் குடியேற தொழில் செய்ய அனுமத்தித்திருந்தால் இன்று மகிந்தர் எங்கிருந்திருப்பார் என்பது பகிரங்க உண்மை. சந்திரிகா தவறவிட்ட அதே சந்தர்ப்பத்தை தான் மகிந்தரும் தவறவிட்டார். இங்கும் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இலங்கையின் இனப்பிரச்சனைக்கு பெரும்பான்மையினரின் ஒத்துழைப்பை பெற்றவர்களாக இவர்கள் மட்டுமே இருந்தனர்.

சிங்களம் ஆட்சி மொழி என இனவாதத்தை பேசி பதவிக்கு வந்ததால் பண்டாவால் செல்வாவுடன் செய்த ஒப்பந்தத்தை புத்த பிக்குகள் முன் கிழிக்கத்தான் முடிந்தது. டட்லி வயிற்றில் மசாலா வடை என்ற கோசத்தால் டட்லி - செல்வா உடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை. வட்ட மேசை மாநாடு கூட்டுவதாக கூறி மிகப்பெரும் பலத்துடன் ஆட்சி அமைத்த ஜே ஆர் உள் இருந்த இனவாத மந்திரிகளுக்கு அடிபணிந்தார் . பிரேமதாசா ஈழம் இல்லை ஆனால் மற்ற எல்லாம் என கூறி அப்போது வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஆட்சியில் இருந்த ஈ பி ஆர் எல் எப் தேர்தலில் கொடுத்த மறைமுக ஆதரவை மறந்து இந்திய அமைதி படையை வெளியேற்ற புலிகளுடன் கூட்டு வைத்து வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு சாவு மணி அடித்தார் . கூடவே எதிர்ப்பாள சிங்கள இளைஞர்களை ஜே வி பி என அழித்து வெறுப்பை சம்பாதித்தார்.  பிரேமதாசா படுகொலையால் வந்தவரோ மரம் கொடி என இனவாதம் பேசியே பதவி காலத்தில் செயல்பட்டார்.

சண்டையில் சலிப்படைந்து இருந்த மக்களுக்கு சமாதன புறாவாக வந்தவர் தான் சந்திரிகா. அதுவரை நாட்டின் எந்த தலைவருக்கும் கிடைக்காத பேராதரவு அவருக்கு கிடைத்தது. வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என நாடு முழுவதும் சந்திரிகா அலை வீசியது. ஆனால் பேச்சுவார்த்தையில் காலம் கடத்திய புலிகள் சண்டைக்கு தம்மை தயார் படுத்துவதை அறிந்தும் காலத்தை கடத்தினார். பாராளுமன்றத்தில் பின்பு முன்வைத்த நீலன் பீரிஸ் தீர்வை பதவிக்கு வந்தவுடன் அவர் வைத்திருந்தால் அது நிறைவேற்றப்பட்டிருக்கும்.
தென்னிலங்கையில் தவளம சுதுநெலும் என சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கப் படவேண்டிய நியாயமான அதிகாரங்கள் பற்றி புத்திஜீவிகள் விளங்கப்படுத்திய காலம் அது.

எதிர்ப்பு நிலை காட்டக்கூடிய சூழ்நிலை எதிர்கட்சிக்கு இல்லாத காலம் அது. தமிழர் விடுதலை கூட்டணி முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் வராத காலம். ஆனால் கால தாமதம் புலிகளுக்கு சண்டையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியது. அது தெற்கை மீண்டும் கொதி நிலைக்கு மாற்றியது. சமாதானத்துக்கான சண்டை ஆரம்பித்தது. அது வடக்கை சந்திரிகாவை வெறுக்க செய்தது. இரண்டு பக்கமும் மீண்டும் இனவாத பேய் தலைவிரித்தாட தொடங்கியது. இனப்பிரச்சனையை தீர்க்க தெற்கில்அதுவரை யாருக்கும் கிடைக்காத சந்தர்ப்பத்தை சந்திரிகா ஆரம்பத்தில் தவறவிட்டு அதை பின்பு காலம் தாழ்த்தி செய்ததால் எதிர்கட்சிகள் எரியூட்டி நாசம் செய்தன. அதை அப்போது புலிகளின் கட்டுபாட்டில் வந்துவிட்ட தமிழர் விடுதலை கூட்டணி வேடிக்கை பார்த்தது.

சந்திரிகாவுக்கு கிடைத்த சந்தர்பம் மகிந்தருக்கும் கிடைத்தது. முதலாவது காலத்தில் மகிந்தரால் எந்த தீர்வையும் முன்வைக்க முடியாத சூழ்நிலை தான் இருந்தது. அதற்கு சந்திரிகாவும் ஒரு காரணம். ரணில் அரசு நோர்வே மூலம் புலிகளுடன் நெருங்கி செல்லும் வேளையில் பல இடையூறுகளை ஏற்படுத்தியவர் சந்திரிகா. ஒரு கட்டத்தில் ரணில் அமைச்சர்களுக்கு வழங்கிய முக்கிய அமைச்சு பதவிகளை ஜனாதிபதி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனதாக்கியதோடு பின்பு ரணில் அரசை கலைத்து தன் தீர்வு திட்டத்திற்கு தீயிட்டவர்களை பழி தீர்த்துக்கொண்டார்.

மகிந்தர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது தெற்கு புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்தது. எதையும் நகர்த்த முடியாத செயல்படுத்த முடியாத நிலையில் மகிந்தர் ஆரம்பதில் திணறினார். அவரை பதவிக்கு கொண்டுவந்த மங்கள, ஜே வி பி கொடுத்த குடைச்சலை சமாளிக்க அவர் பல நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தினார். அந்த சூழ்நிலையில் அவரால் தீர்வு திட்டம் பற்றி பேசுவது அவரின் அரசியல் தற்கொலைக்கு வித்திடும் என பயந்தார். ஒரு இரண்டும் கெட்டான் நிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.
எதிரிக்கு எதராக போராடுவதில் மட்டுமல்ல எதிரியை வலிந்து சண்டைக்கு இழுப்பதிலும் வல்லவரான பிரபாகரன் மாவிலாறில் பூட்டிய பூட்டை சர்வதேசம் சொல்லியும் திறக்காத செயல் தான் மகிந்தருக்கு புதுவழியை காட்டியது.

அதுவரை திசை தெரியாமல் தவித்த மகிந்தர் முதலில் பார்த்தது இந்தியாவின் பக்கமே. மேற்குலகு ஆதரித்தாலும் மற்றய நாடுகள் உதவினாலும் இந்திய தலையீடு அதை நிர்மூலமாக்கும் என்ற பாடத்தை ஜே ஆர் படித்தது மகிந்தருக்கு தெரியும். அதனால் யுத்தத்தை தொடங்க பெரியண்ணையின் அனுமதிகேட்டு தன் தம்பிமாரை தூது அனுப்பி தமிழருக்கு 13+ தரத் தயார் என்றார். இராணுவத்திற்கு வேண்டியதை செய்யும் அதிகாரத்தை கோத்தாவுக்கு வழங்கினார். கூடவே தமிழ் தரப்புகளை தாஜா பண்ண திஸ்சவிதாரண தலைமையில் தீர்வுக்கான ஆலோசனைகளை தரச்சொன்னார். மொத்தத்தில் மகிந்தர் அப்போது இருந்த தெற்கின் கொதிநிலையை கவனத்தில் கொண்டு தீர்வு திட்டத்திற்கல்ல இறுதி யுத்தத்திற்கு தான் தன் முதல் ஜனாதிபதி காலத்தை பயன்படுத்தினார். அன்றைய சூழலில் அதைத்தான் அவரால் செய்யமுடிந்தது. ஆனால் அவரது இரண்டாவது பதவிக்காலம் அப்படி அல்ல.

யுத்தத்தின் வெற்றி மட்டுமல்ல யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதியை தேர்தலில் வென்று இராணுவ புரட்சி செய்யலாம் என்ற சந்தேகத்தில் சிறையிலும் அடைத்தது மூலம் நாட்டில் அரசியல் தலைமைக்கு கட்டுப்பட்டதாக இராணுவத்தை நிலைநிறுத்தினார்.
அதுவரை தினம் தோறும் அரச படைகளின் மரண ஓலம் கேட்ட தெற்கின் கிராமங்களில் பிரபாகரனை அழித்ததன் மூலம் நிம்மதியை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலை அவருக்கு மிகவும் வலுவான சந்தர்ப்பத்தை வழங்கியது. பிளவுபட்டு இருந்த இரண்டு இனங்களின் உறவுக்கு பாலமாகும் பாக்கியம் அவருக்கு வாய்த்தது. அன்று ஒரு நாட்டுக்குள் சகல இனங்களும் வாழ அதிகார பரவலாக்கல் எனும் சங்கிலியால் அவர்களை பிணைத்து பிரிவினை என்ற வாளை அவர்கள் தூர வீச அரிதாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு அது.

ஒப்பீட்டளவில் துட்டகெமுனு மன்னனுக்கு பின் கிடைத்த பெருமதிப்பு தெற்கில் அவருக்கு இருந்தது. புலிகளின் அழிவை எதிர்பார்த்த வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்களின் நிலையம் அதுதான். ஏனென்றல் வீழ்த்தப்பட்டது தமிழ் மக்கள் மன்னனான எல்லாளன் அல்ல. சகோதரப் படுகொலைகளின் மூலம் போராளிகளை, தன்னை விமர்சித்த தலைவர்களை, பொதுமக்களை, தன்னை நம்பி போராடவந்த பல்லாயிரம் போராளிகளை பலிகொண்ட பலிகொடுத்த பிரபாகரன் என்ற மனிதமிருகம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை சென்று தப்பிவந்த மக்களை முள்வேலி முகாம்களில் அடைத்த நிகழ்வு தான் வெறுப்பின் ஆரம்பமானது. அதற்கு மேலாக சரணடைந்தவரில் பலருக்கு என்ன நடந்தது என்பதும் வதந்திகளுக்கு வித்திட்டது.

இந்த இடத்தில் ஜே வி பி யின் 1970 ஆயுத புரட்சியை மீள நினைவூட்டுகிறேன். நேரடி மோதலில் பலர் கொல்லப்பட்டாலும் அல்லது பிடிபட்ட கதிர்காம அழகி மனம்பேரி முதல் களனி ஆற்றில் மிதந்தவர்கள் வரை பலர் கொடூரமாக கொல்லப்பட்டாலும் அதன் முக்கிய தலைவர்கள் பின் பொதுமன்னிப்பு பெற்றார்கள். ஆனால் பிரபாகரனின் கொடூர செயல்கள் அரச படைகளை அவருடன் கூட இருந்தவரை மட்டுமல்ல அவரால் போராட்டத்திற்கு பலாத்காரமாக பிடித்து செல்லப்பட்டவரையும் சுட்டுத்தள்ளும் மனநிலைக்கு மேலிடம் கட்டளையிட்டது. இது மாறாத வடுவாக மகிந்தரை பாதித்தது.  வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கூட சுட்டுக்கொல்லும் கட்டளை எமக்கு இடப்பட்டது என யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத்பொன்செகா தெற்கில் பகிரங்க மேடையில் பேசினார். நடந்தவற்றை சனல் 4 படமாக காட்டியது. அந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்து விற்றதும் அதே இராணுவம் தான் என்ற உண்மை தெரிந்த பின்பும் மகிந்தர் கட்டளையிட்ட தன் தம்பியை மீற முடியாமல் மௌனம்காத்தார் அதுவே அவரின் வெற்றி மமதை முகத்தை வெளிப்படுத்தியது.

உடனிருந்தே கொல்லும் வியாதிபோல் சந்திரிகாவுக்கு ஒரு மாமன் அனுருத்த ரத்வத்த மகிந்தருக்கு கோத்த, பசில் சகோதரர் அமைந்ததும் அவர்கள் இருவரினதும் அரசியல் பயணத்தில் காணப்பட்ட ஒரு ஒற்றுமை தான். இருவருமே இதயசுத்தியுடன் செயல்பட முடியாமைக்கு அவர்களின் உறவுகளின் மேலாதிக்கமும் முக்கிய காரணியாக அமைந்ததை காணலாம். அவர்கள் இருவரின் வெற்றிக்கு வித்திட்ட உறவுகளே வீழ்ச்சிக்கும் காரணம் ஆனார்கள். சந்திரிகா காலத்தில் முன்பே இராணு சேவையை விட்டு விலத்திய ரத்வத்தையும் மகிந்தர் காலத்தில் அதே போல் கொண்டுவரப்பட்ட கோத்தவும் மீண்டும் இராணுவ துறையில் முக்கியத்துவம் பெற்றதும், பொருளாதாரம் பற்றி செயல்பட அதுவரை அமெரிக்காவில் வாழ்ந்த பசில் அழைத்து வரப்பட்டதும் தான் அவர்கள் இருவரினதும் ஆரம்ப வெற்றிக்கும் இறுதி தோல்விக்கும் வழி வகுத்தது.

இன்று இவர்கள் இருவருமே பதவி இழந்து தம் கடந்தகால தவறுகளை திருத்தி மீண்டும் ஒரு வரலாற்று கடமையை செய்வார்களா என்ற கேள்விதான் தற்போது அவர்களின் அரசியல் மீள் பிரவேச செய்தியால் எழுகிறது. சந்திரிகா பதவி முடிவடைந்த பின் தன் தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு மனவருத்தபட்டது இதய சுத்தியுடனானது என்றால் அது வரவேற்கதக்கது. மாறாக மகிந்தரை மீண்டும் தலைமைக்கு வராமல் செய்வதற்கான உள் கட்சி யுத்தம் என்றால் அது தெற்கின் இனவாதத்துக்கு தீனி தான் போடும்.

அதே போல தன்னை சுற்றி இருந்தவர்களின் செயல் சகோதரர்களின் நடவடிக்கை பொதுபலசேன செயல் என்பவற்றை மீள்பரிசோதனை செய்து செயல் படுவாரானால் அது மகிந்தரின் மீள் வருகையால் நன்மை உண்டு என எண்ணத்தூண்டும். மாறாக ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடித்தது தமிழர்களும் முஸ்லிம்களும் தான் என தங்காலையில் தன் வீட்டில் வைத்து கூறியவர் அதனை மீண்டும் தேர்தல் காலத்தில் தென்னிலங்கையில் கூறுவாரானால் அது இன ஒற்றுமைக்கு பெரும் நாசத்தையே ஏற்படுத்தும்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com