Contact us at: sooddram@gmail.com

 

ஆம் ஆத்மி... கானல் நீரா.. மாரீச மானா?

(தமிழருவி மணியன்)

'அதிகாரத்தின் மீதுள்ள தனிமனித ஆசை இரு வகைப்படும். ஒன்று... தலைமையேற்பவரின் வெளிப்படையான விருப்பம். இரண்டாவது... அந்தத் தலைவரைப் பின்தொடரும் மனிதர்களின் அந்தரங்கமான வேட்கை. ஒரு தலைவரைப் பின்பற்றத் தொடங்கும்போதே அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவும், வெற்றியைப் பங்குபோட்டுக்கொள்ளும் நினைவும் தொண்டர்களுக்கு இயல்பாக வந்து வாய்த்துவிடுகிறது’ என்றார் பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ஆம் ஆத்மியின் வருகையும், அது பெற்ற வியத்தக வெற்றியும், ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் முடிவதற்குள் அதன் தலைவர்களுக்குள் அன்றாடம் அரங்கேறும் பூசலும் பிணக்கும், அவசரம் அவசரமாக நாடு முழுவதும் பதவி நாற்காலிகளில் அமரத் துடிக்கும் தொண்டர் படையின் ஆசைவேகமும், ரஸ்ஸலின் மேதைமைக்குச் சரியான சாட்சியங்களாகின்றன.

 அண்ணல் காந்தி, சுதந்திர இந்தியாவில் அரசுப் பொறுப்பை அலங்கரிக்கும் அமைச்சர்கள், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், ஆடம்பர ஆரவார விளம்பர வெளிச்சங்களில் இருந்து விலகி நிற்பவர்களாகவும், சிறிய வீடுகளில் எளிமை துலங்க வாழ்பவர்களாகவும், ஊழலற்ற அதிகார வர்க்கத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்; ஆட்சி அதிகாரம் ஓரிடத்தில் குவிந்துவிடாமல், கடைசி கிராமம் வரை பரவலாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்; ஆள்பவர்கள் மக்களை அடிக்கடி நேரில் சந்தித்து, அவர்களுடைய குறைகளைத் தீர்ப்பதற்குத் தங்களை முற்றாக அர்ப்பணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அண்ணலின் விருப்பங்களை அவரது 'அரசியல் வாரிசு’ நேருவே நிறைவேற்றவில்லை. இந்த மேன்மையான காந்தியக் கனவுகளை நனவாக்குவதற்காகவே அரசியல் களத்தில் 'ஆம் ஆத்மி’ கண்விழித்திருப்பதாக கெஜ்ரிவால் அறிவித்தபோது, ஆரோக்கியமான அரசியலை விரும்பும் அறிவுசார் இளைஞர்கள் அவரை இருகரம் நீட்டி வரவேற்றனர்.

ஊழல் அரசியல்வாதிகளையும், அறத்துக்குப் புறம்பான செயல்களில் மனச்சான்றின் உறுத்தல் மருந்துக்குமின்றி ஈடுபட்டுவரும் அதிகார வர்க்கத்தையும் நீண்டகாலமாகப் பொறுத்துக்கொண்ட பொதுமக்கள், இந்தச் சமூக விரோதச் சக்திகளை எதிர்த்துக் களமாடும் தலைவராக கெஜ்ரிவாலைக் கொண்டாடினர். ஊழலுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுப்பவர்கள் கறைபடியாத, களங்கமற்ற தலைவர்களாக இருந்தால், அவர்களை அதிகார பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க இந்திய வாக்காளர்கள் முன்வருவார்கள் என்பதையே கெஜ்ரிவாலுக்குக் கிடைத்த வரவேற்பு வெளிப்படுத்தியது. ஆனால், ஒரு தேர்ந்த போராட்டக்காரர் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் திகழ்வதற்கு வாய்ப்பில்லை என்பதை மிகக் குறுகிய காலத்தில் கெஜ்ரிவால் உணர்த்திவிட்டார். மற்ற கட்சிகளைப் போன்று ஆம் ஆத்மியும் பதவிப் போட்டியாளர்களின் பாசறைதான் என்பதை அவரது தளபதிகள் நிரூபித்துவிட்டனர்.

'நல்ல தொடக்கம் பாதிப்பணி நிறைவேறியதற்கான அடையாளம்’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆனால், 'ஆம் ஆத்மி’ அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆரம்பக் காட்சியே, அது அறிவித்த கொள்கைப் பிரகடனத்துக்கு எதிராக அமைந்துவிட்டது. 'இந்திய அரசியலைச் சீரழித்த காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டையும் அழித்தொழிப்பதே எங்கள் முதல் லட்சியம்’ என்று முழங்கிய 'ஆம் ஆத்மி’, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது இமாலயத் தவறு. 'நாங்கள் ஆதரவு கேட்கவில்லை. அவர்களாக வந்து ஆதரிக்கிறார்கள்’ என்று நீட்டி முழக்குவதும், மக்களிடம் கருத்து கேட்கும் நாடகம் நடத்தியதும், கெஜ்ரிவாலின் அரசியல் கச்சேரியில் சுத்தமான சங்கீதப் போர்வையில் சுவாரஸ்யமான சந்தர்ப்பவாத துக்கடாக்களை மட்டுமே கேட்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்திவிட்டது.

'ஆம் ஆத்மி’ கட்சிக்குத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் வாய்ப்பை டெல்லி வாக்காளர்கள் வழங்கிவிடவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. 33 சதவிகித வாக்குகளுடன் 31 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 29.5 சதவிகித வாக்குகளுடன் 28 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் எட்டு இடங்களில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், 24.5 சதவிகித வாக்குகளை அடைந்திருக்கிறது. இந்த நிலையில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பூரணமாகப் பெறும் வரை கெஜ்ரிவால் பொறுமை காத்திருக்க வேண்டும். நான்கு மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதால், அரசுக்குப் பெரிய செலவு நேர்வதற்கு வாய்ப்பில்லை. அதுவரை பொறுத்திருக்க ஆம் ஆத்மியின் பதவி ஆசை விடவில்லை. வைரத்தை வைரத்தால் அறுக்கலாம்; முள்ளை முள்ளால் அகற்றலாம்; நெருப்பை நெருப்பால் அணைக்கக் கூடுமா? கெஜ்ரிவால் அந்தப் புரட்சியில்தான் இப்போது ஈடுபட்டிருக்கிறார்.

கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்கும் வைபவத்தை மக்கள் முன்னால் ராம்லீலா மைதானத்தில் பெருத்த ஆரவாரத்துடன் நடத்தியதில் தவறில்லை. 'மக்கள் அரசு’ என்பதற்கான குறியீடாக அதை அங்கீகரிக்கலாம். ஆனால், பதவியேற்க மெட்ரோ ரயிலில் வந்தது, மலினமாக மக்களை ஏமாற்றும் நாடக அரசியல் என்பது வெளிப்படை. ஒவ்வொரு நாளும் அரசு அலுவலகத்துக்கு மெட்ரோவில் வருவதற்கு அமைச்சர்கள் முடிவெடுத்திருந்தால், முதல் நாள் மெட்ரோ பயணம் உண்மையானதாக இருந்திருக்கும். பெட்ரோல் விலையேற்றத்தின்போது ஊரை ஏமாற்ற வீரப்ப மொய்லி நடத்திய மெட்ரோ பயணத்துக்கும், கெஜ்ரிவாலின் பயணத்துக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்த நாடகம்?

அரசு கார்களை அமைச்சர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று முதல் நாள் அறிவிப்பு. அடுத்த சில நாட்களில் அரசின் இன்னோவா கார்களில் அணிவகுப்பு. இவர்களும் சமூகக் கூச்சம் அற்றவர்கள்தானா? அரசு அலுவல்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்டாலே பரிசுத்தம்தான். எளிய முறையில் சிறிய வீடுகளில்தான் அமைச்சர்கள் இருப்பார்கள் என்றது ஆம் ஆத்மி. ஆனால், முதல்வர் கெஜ்ரிவால் குடும்பத்திற்கு ஐந்து படுக்கை அறைகள் கொண்ட வீடு; அதற்குப் பக்கத்திலேயே முதல்வர் அலுவலகப் பணிகளுக்கு ஐந்து படுக்கை அறைகள் உள்ள வீடு என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடும் விமர்சனங்களுக்குப் பின் அது கைவிடப்பட்டது. உண்மையை உரைப்பது எளிது. உண்மையாக வாழ்வதுதான் அரிது. கெஜ்ரிவால் உண்மையை உரைப்பவர் மட்டும்தானா?

தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தவர்களும், இருப்பவரும் சொந்த வீடுகளில்தானே காரியமாற்றினர். காமராஜரின் திருமலைப் பிள்ளை வீதி வீடும், கலைஞரின் கோபாலபுரம் வீடும் 10 படுக்கை அறைகள் கொண்டிருக்கவில்லையே. ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர் சிறிய வீட்டில் இருக்க முடிகிறது. மாநில அங்கீகாரம் பெறாத ஒரு சிறிய நிலப்பரப்பின் முதல்வருக்கு 10 படுக்கை அறைகள் தேவைப்படுகிறது. விமர்சனக் கணைகள் வீசப்பட்டதால் இன்று மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு தயாராகிறது. உண்மையான எளிமை வேறு; வேடம் புனைந்த எளிமை வேறல்லவா?

கெஜ்ரிவால், 'வாரத்துக்கு ஒரு நாள் ஜனதா தர்பார் நடக்கும். அமைச்சர்கள் வீதியில் நாற்காலியிட்டு அமர்ந்து மக்களின் குறைகளைக் கேட்டு உடனே தீர்வு காண்பார்கள்’ என்றார். அவ்வளவுதான். ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். ஒரே களேபரம். பாதியில் முதல்வர் பறந்துவிட்டார். இனி, ஜனதா தர்பார் இல்லை. ஷங்கரின் 'முதல்வன்’ படத்தில் வரும் நடிகர் அர்ஜுனைப் போன்று டெல்லி வாக்காளர்கள் கெஜ்ரிவாலை ஒருநாள் முதல்வராக்கவில்லை. அடுத்த நாள் முதல்வர் இல்லை என்ற அவசரம் அர்ஜுனுக்கு இருந்தது நியாயம். கெஜ்ரிவாலுக்கு அந்த அவசரம் அவசியமா?

ஆம் ஆத்மி வேட்பாளர்களாக நின்று டெல்லி சட்டபேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் வினோத்குமார் பின்னி. அமைச்சரவைப் பட்டியலில் தனக்கு இடமில்லை என்று தெரிந்ததும் முதல் கூட்டத்திலேயே கலகக் கொடி பிடித்த கொள்கைவேந்தர் அவர். ஊடகங்களுக்கு முன்னால் நின்று 'கெஜ்ரிவால் ஒரு பொய்யர்’ என்று சாடியவர், 'ஆம் ஆத்மி வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்கிறது’ என்றும் விமர்சனம் வைத்தார். 'அவர் நாடாளுமன்ற வேட்பாளராக நிற்க விரும்பினார். எம்.பி. தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் நிற்க ஆம் ஆத்மியில் அனுமதியில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன். அந்தக் கோபத்தில் பின்னி இப்படிப் பேசுகிறார்’ என்று கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேவையின்றி ஓர் இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, ஆம் ஆத்மியின் முடிவு வரவேற்புக்குரியது. ஆனால், கெஜ்ரிவால் இப்போது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் நிற்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று வாய்மலர்ந்திருக்கிறார். 'ஊருக்குத்தான் உபதேசம். அது எந்த நிலையிலும் எனக்கில்லை கிளியே’ என்று பாடும் ஞானச்சித்தர் கெஜ்ரிவால், பதவி வள்ளியைக் கரம்பிடிக்க வேடனாகவும், விருத்தனாகவும் வேடமிடும் அரசியல் நாடகத்தின் நவீன வேலன் என்பது நன்றாகப் புரிகிறது.

தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை, கட்சி உருவானபோது அறிவித்த கொள்கைகளை, ஆட்சியில் அமர்ந்ததும் நிறைவேற்றுவதற்கு ஆட்சித் திறனும், அரசியல் முதிர்ச்சியும் அவசியம். மக்களை வீதியில் திரட்டி ஊர்வலம் நடத்தவும், புரட்சிகரமான கோஷங்கள் முழங்கவும், கவர்ச்சிகரமான வாய்வீரமும், உணர்ச்சியைத் தூண்டும் பயிற்சியும் இருந்தால் போதும். கெஜ்ரிவால் இந்த இரண்டாவது கலையைத்தான் ஒழுங்காக கற்றிருக்கிறார். தன் உத்தரவுக்குப் பணிந்து நடக்காத காவல் துறையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என்பது கூட்டாட்சி அமைப்புக்கு முரணானது. அதே நேரத்தில், இந்தியாவின் மத்திய தலைமைச் செயலகம், நாடாளுமன்றம், பன்னாட்டுத் தூதரங்கள் உள்ள தலைநகர் டெல்லியின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியமாக இருக்க முடியாது. கெஜ்ரிவால் மத்திய அரசுடன் பொறுமையாகக் கலந்து பேசித் தீர்வுகாண வேண்டிய விவகாரம் இது. ஒரு முதல்வரே ஆட்களைத் திரட்டிக்கொண்டு உள்துறை அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட முயல்வது விபரீதமான அரசியல் விளையாட்டு. இது நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம்.

'சுயராஜ்யம் என்பது சுயகட்டுப்பாடுடன் கூடிய சுய ஆட்சியைக் குறிக்கும். எல்லாக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டிருப்பது என்பது அதன் பொருள் அல்ல’ என்றார் காந்தி. கெஜ்ரிவால் எந்த அளவு காந்தியத்தை அறிவார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். சுயகட்டுப்பாடற்ற அமைப்பாகிவிட்டது ஆம் ஆத்மி. வினோத்குமார் பின்னி போன்றவர்களின் பதவிப்போட்டி, நடனக் கலைஞர் மல்லிகா சாராபாயும், முதல் வரிசைத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் குமார் விஸ்வாஸும் பகிரங்கமாக நடத்தும் தனிநபர் தாக்குதல், சில்லறை வணிகத்துக்கு ஆதரவாக கெஜ்ரிவால் எடுத்த நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சிக்கும் கேப்டன் கோபிநாத் செயல்கள், ரிஷிகேஷ் கட்சிக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் நாற்காலி எறிந்து நடத்திய கோஷ்டிப்பூசல் என்று இந்திய அரசியல் கட்சிகளில் காணப்படும் அனைத்துக் கல்யாண குணங்களும் ஆம் ஆத்மியின் அன்றாட நிகழ்வாகிவிட்டன. சென்னையில் இரண்டு தலைமை பீடங்களின் அதிகாரப் போட்டி கமிஷனர் அலுவலகம் வரை சென்று நிற்கிறது. ஆம் ஆத்மி நம் கண்களை ஏமாற்றும் கானல் நீரா... ராமனை வஞ்சித்த மாரீச மானா?

ஆம் ஆத்மி ஒரு கார்பரேட் கட்சியா... காந்திய இயக்கமா? கெஜ்ரிவால் ஒரு சோஷலிஸ்டா... கம்யூனிஸ்டா... கார்பரேடிஸ்டா? இந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை என்ன... அயலுறவுக் கொள்கை என்ன? சுயசார்புச் சுதேசிப் பொருளாதாரம், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு ஆகிய இரண்டு எதிரெதிர் தளங்களில் எந்தப் பக்கம் ஆம் ஆத்மி பார்வையைச் செலுத்தும்? எல்லா மாநிலங்களிலும் கால்பரப்பிக் கடைவிரிக்கும் ஆம் ஆத்மி ஒவ்வொரு மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறதா? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் ஆசையில் 400 தொகுதிகளில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போகும் ஆம் ஆத்மி, தேர்தல் செலவுக்கு யாரிடம் கைநீட்டும்? மாநிலக் கட்சிகளே பலநூறு கோடி செலவழிக்கும் வலிமையோடு வலம்வரும் தேர்தல் களத்தில் கெஜ்ரிவாலுக்குப் பின்புலமாக இயங்கப்போவது எந்த அயல்நாட்டு நிறுவனம்? சேவையும் தியாகமும் நிறைந்த, மக்கள் நலனுக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துவிட்ட 400 வேட்பாளர்கள் கிடைத்துவிட்டார்களா? இவர்களில் எத்தனை வினோத்குமார் பின்னிகள் இருப்பார்களோ... யார் அறிவார்?

தமிழகம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட அரசியல் வரலாற்றின் பழைய நிகழ்வுதான் இன்று புதுடெல்லியில் ஆம் ஆத்மியாகப் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை வளர்த்தெடுத்த பெரியார் தேர்தல் அரசியலில் இருந்து விலகி நின்றார்; தேர்தலில் நின்றவர்களை 'வாக்குப் பொறுக்கிகள்’ என்று வர்ணித்தார்; தன்னுடன் இருப்பவர்கள் தேர்தலில் பங்கேற்கத் தடைவிதித்தார். அவருக்குப் பின்னால் திரண்டுநின்ற இளைஞர் படையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய அண்ணா, அரசியல் ஆசைகளுடன் பெரியாரை விட்டுப் பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்தார். ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்ற கவர்ச்சி கோஷத்துடன் 1967-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். அண்ணா எளிமையானவர்; ஊழலின் நிழல் படியாதவர்; வாரிசு அரசியலை வளர்க்காதவர். அவர் உருவாக்கிய கழகம் அவருக்குப் பின் எந்த நிலையில் நிற்கிறது என்பதை நானிலமே நன்கறியும்.

அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். இளைஞர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர். கெஜ்ரிவால் வந்து சேர்ந்தார். கட்சி அரசியல் வேண்டாம் என்ற அண்ணா ஹசாரேவிடம் அணிவகுத்து நின்ற இளைஞர் படையைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார். ஹசாரேவை விட்டுப் பிரிந்தார். ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார். மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும்; ஒவ்வொருவருக்கும் 700 லிட்டர் தண்ணீர் தரப்படும் என்றார். பெரும்பான்மை இல்லாமலே ஆட்சிபீடத்தில் அமர்ந்துவிட்டார். கழகத்தின் கதி ஆம் ஆத்மிக்கு நேரப்போவதைக் காலம் நிச்சயம் உணர்த்தும்.

ஜெ.பி-யின் முழுமைப் புரட்சியில் 1970-களில் முகிழ்த்தவர்கள்தான் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும். ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்திய இவர்கள் இருவரும் இன்று ஊழல் நாயகர்களாக உருமாறிவிட்டனர். கன்ஷிராமுடன் ஆதிக்க அரசியலுக்கு எதிராகக் களம் கண்டவர்தான் மாயாவதி. இன்று கறைபடிந்த அரசியல் தலைவர்களின் பட்டியலில் அவருக்கு முக்கியமான இடம் உண்டு. கலைஞரின் ஊழலை எதிர்த்துப் புறப்பட்ட எம்.ஜி.ஆரோ அவரது வாரிசுகளோ வான்மழைப்போல் தூய்மையானவர்கள் என்று வாழ்த்துப் பா வாசிக்க முடியாது. கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி தளபதிகளும் எப்போது தங்கள் சுயமுகத்தைக் காட்டுவார்கள் என்றறிய காலத்தின் பரிசோதனைக்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com