Contact us at: sooddram@gmail.com

 

சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல் 

கே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அரசியல் கருத்தாடலாக ஜெனிவா மாறியுள்ளது. இது ஏன்?

ப- உண்மையில் ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்கள், மகன் மற்றும் உறவினர்கள் என்போர் நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அரசியலமைப்புத் தடைகள் மற்றும் குடும்பத் தடைகளை உருவாக்குகின்றனர் என்று சொல்வதே யதார்த்தமாகும். அங்கு சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகத்தின் வேறு கூறுகளான நீதித்துறைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற எந்தவொரு அம்சமும்  நடைமுறையில் இல்லை என்பதைத்தான் கடந்த மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆக, இலங்கையில் இன்று ஜனநாயகம் இல்லை என்று ஒருவரால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமான அதேவேளை நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை என்றும் ஒருவரால் கூறிவிட முடியும். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த சவால்களிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது என்பதே அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கேட்கப்பட வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும். நிச்சயமாக நாங்கள் கடந்த காலங்களில் எராளம் சவால்களுக்கு முகங்கொடுத்தோம். அரசு சார்ந்து மட்டுமன்றி சிவில் சமூக இயக்கங்கள் சார்ந்தும் அவை முன்னரை விட வித்தியாசமான சவால்களாக உள்ளன.

இந்த நேர்காணலில் என்னை நானே  சிவில் சமூக செயற்பாட்டுவாதம் குறித்து ஒரு சுயவிமர்சனத்தை முன்வைப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். நாம் இந்த வித்தியாசங்களை விளங்கிக்கொள்வதற்கு மட்டுமன்றி இப்படிப்பட்ட நிலையில் ஏன் நாம் எதிர்ப்பை வெளிக்காட்டாது அல்லது மிகக் குறைந்தளவான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இலங்கையில் 1970 களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டு வருபவள் நான். இப்போது பிரேமதாஸாவின் காலத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வரலாற்றில் எங்களில் பலருக்கும் மிக மோசமான காலகட்டமாக இருந்தது 1988-1989 காலப்பகுதிதான். இக்காலப் பகுதியில் தென்னிலங்கையில் அநேகமானவர்கள் காணாமல் போயினர். 1990ல் கிழக்கிலும் காணாமல் போயினர். இத்தகைய மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டனர். இருந்தபோதும் இப்படிப்பட்ட காணாமல் போதல்களை ஆவணப்படுத்தும் சில சிவில் சமூக இயக்கங்கள் அப்போதும் செயற்பட்டன. சர்வதேச சமூகம், மனித உரிமைகள் அமைப்பு போன்றவற்றிடம் நாங்கள் இந்த ஆவணங்களுடன் சென்றோம்.

அதன்விளைவாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளை இலங்கைக்கு எங்களால் கொண்டு வர முடியுமாகவிருந்தது. அது மட்டுமன்றி அரசாங்கம் அது தொடர்பாக ஓர் ஆணைக்குழுவை நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எஞ்சியிருப்பவர்களுக்கும் ஓர் உறுதிமொழியை வழங்குவதற்குமான சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுக்கவும் முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவது பற்றிய சாதகமான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் சர்வதேச சமூகம் ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கான இடைவெளியையும் ஏற்படுத்தவதாக இருந்தது.

1971 ஆண்டைநோக்கும்போது இந்த நிலமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரச்சாரங்கள் காணப்பட்டன. உதாரணமாக மீள்கட்டுமான முகாம்கள் என அழைக்கபட்ட தற்காலிக முகாம்களில் 10000 க்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கெதிரான சர்வதேச பிரச்சாரங்கள் அப்போது முன்னெடுக்கபட்டன. இப்பொது நான் நினைக்கிறென் நாம் மையப்புள்ளிக்கு வந்திட்டோம்.

இன்று எந்தவொரு வகையான சர்வதேச தலையீடும் எதிராகவே பார்க்கப்படுகிறது. ஏந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான புரிதலின்றி சும்மா விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்புகள், மறுப்புக்கள் அனைத்தும் எதிர்-அரசாங்க நடவடிக்கையாகவும், ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கெதிரான நடவடிக்கையாகவம் விளஙகிக் கொள்ளப்படுகிறது. ஜனநயக் கொள்கைகள், மனித உரிமைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு விமர்சனத்தையும் நீங்கள் கொண்டிருக்க முடியாது ஒரு சூழல் இன்று அங்கு தோன்றியுள்ளது.

ராஜபக்ஸ அரசாங்கமானது வெளிநாட்டுத் தலையீடுகள் ஒர் தவறான அம்சம் என்ற கருத்தையே மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஆகவே இது ஒரு சவால்மிக்க விடயமாகவுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த 2, 3 வருடங்களில் நடந்த சம்பவங்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். உதாரணமாக விமல் வீரவன்ச ஐ.நா. சபைக்கு முன்பாக நடத்திய சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை பற்றி பேசுகிறீர்கள் அனால் அதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு எப்படிப்பட்டது! இவர்கள் மஹிந்தவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் அவர்கள் அவரைத் தூக்குக் கயிற்றுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என்றுதான் எதிர்வினையாற்றப்பட்டது.

அங்கு ஒரு அச்சம் நிலவுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றி அரசாங்கம் ஒரு தவறான அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையில் ஜனாதிபதியையோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையோ அல்லது வேறுயாரையுமோ சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு முன்னால் இந்த வழியில் கொண்டு நிறுத்தவதற்கான முயற்சி அல்ல அது. ஆனால் அவர்கள் அவ்வாறு அதனைக் கட்டமைத்துவிட்டார்கள். அதனை ஒரு தேவையற்ற தலையீடாக காண்பிக்கின்றனர். ஜனாதிபதியை ICCக்கு கொண்டு செல்ல அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற கருத்தே பரப்பப்பட்டுள்ளது. ஆக அங்கே சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், ஐ.நா.சபை மற்றும் ஜெனீவா பற்றியெல்லாம் ஓர் உளவியல் அச்சம் பொதுமக்கள் மத்தியில் தோற்றுவிக்கபட்டுள்ளது.

உலக வரைபடத்தில் ஜெனீவா எங்கேயுள்ளது என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவைப்பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஓவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் மனித உரிமைகள் ஆணைக்கழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடைபெறுகிறது. இதனால் இலங்கையிலுள்ள அனைத்து சிங்களப் பத்திரிகைகளும். தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் ஜெனிவாவைப் பற்றி பேசுகின்றன. ஜெனிவா என்பது தேசத்துக்கெதிரான இலங்கை மக்களுக்கெதிரான ஒர் இடம் என்றே மக்களுக்கு சொல்லப்படுகிறது.

மஹிந்தவின் அரசாங்கமே இலங்கை என்றொரு மாயையும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜபக்ஸவின் ஆட்சியை விமர்சித்தால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், நாங்கள் தேசப்பற்று அற்றவர்கள், எமது நாட்டை விமர்சிப்பவர்கள் எமது நாட்டைப் பற்றி அக்கறையில்லாத மக்கள் நாங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அர்த்தமற்ற நிலைப்பாடாகும்.

சிலர் ராஜபக்ஸ அரசாங்கம் ஊடகங்களை மிகத் திறமையாகக் கையாள்வதாக கருதுகின்றனர். அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இருவகையான பொதுசன ஊடகங்கள் மீதும் அரசாங்கம் மிகத் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மக்கள் மத்தியில் அவர்கள் இத்தகைய கருத்துப் போக்கினையே உருவாக்கியுள்ளனர்.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை முறையான வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்ட முயன்ற போது அதுவும் விமர்சிக்கப்பட்டது. உண்மையில் ஷிராணி பண்டார நாயக்கா ஒரு சிறந்த பிரதம நீதியரசர் என்று சொல்லவரவில்லை. மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஷிராணி அரசாங்கத்துக்கு பக்கச்சார்பாக இருந்தபோது சிறந்தவராக இருந்தார். பின்னர் பல காரணங்களுக்காக (அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்) அவர் மாறியபோது அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்தது. இதுதான் நாங்கள் கொண்டிருக்கும் விமர்சனமாகும். இதனால்தான் இந்தக் குற்றப் பிரேரணை தவறானது என்று நாங்கள் கூறினோம். இதனால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், இலங்கைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டோம்.

நாட்டில் மக்கள் துருவமயப்பட்டிருக்கின்றனர். இன்று நாட்டிலுள்ள சாதாரன மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் அரசாங்கம் பொருளாதார ரீதியாக மிகவும் ஸ்த்திரமாக இருக்கிறது என்ற எண்ணம் ஊட்டப்பட்டிருக்கின்ற அதேவேளை நாட்டின் இந்த வளர்ச்சியை சீர்குலைப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் சதிதான் இந்த சர்வதேசத் தலையீடுகள் என்ற எண்ணமும் சாமான்ய மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. இதனால் சிவில் சமூக இயக்கங்களுக்குள்ளிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவது இலகுவானதாகவுள்ளது.

இரண்டாவது காரணம் கடந்த வருடங்களில் சிவில் சமூக இயக்கங்களின் விருத்தியையும் அசைவியக்கத்தையும் பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. எடுத்துக் காட்டாக, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், Aids ற்கு எதிரான  விழிப்புணர்வு, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்து அவை சிறந்த பணிகளை ஆற்றியுள்ளன. ஆனால் இவை அனைத்தும் சிறியளவில் நடைபெறும் விடயங்களாகும். அவை நாட்டின் பொது நிகழ்வுகளோடு பெரிதளவு தொடர்பைக் கொண்டிருப்பதில்லை. ஆக அங்கே நிறையச் செயல்வாதங்களுள்ளன. ஆனால் அவை துண்டு துண்டாகக் காணப்படுகின்றன. அவை குறிப்பிட்ட சில விடயங்கள் மீது மட்டுமே கவனஞ் செலுத்துகின்றன. இன்று இலங்கையில் பாரியளவில் மனித உரிமை, ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் சார்ந்து இயங்குகின்ற சிவில் சமூக இயக்கங்களின் வலையமைப்பொன்று அங்கு இல்லை. இதனால் இந்த செயற்பாட்டுவாதங்கள் தனிமைப்பட்டதாகவும் நாட்டின் பொதுப்போக்கில் எந்த தாக்கத்தையுமே எற்படுத்த முடியாததாகவுமுள்ளன.

கே- ஆம் சர்வதேச மனித உரிமைகள் செயலியக்கத்துக்கும் உள்நாட்டு செயலியக்கத்துக்குமிடையிலான தொடர்பின்மை நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகும். அதாவது நாங்கள் அண்மையில் அறிந்துகொண்டோம் மாத்தளையில் புதைக்கப்பட்டிருந்த 150க்கு மேற்பட்ட எலும்பக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம். அவை புதைக்கப்படுவதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறு வார்த்தைதானும் சிவில் அமைப்புகளிடமிருந்து வெளிவரவில்லை. இதற்கென ஒரு சிவில் சமூக ஆணைக்கவொன்றை சிவில் சமூகத்தால் உருவாக்கி இருக்க முடியும். இவை போன்ற சம்பவங்களுக்கு நாங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் காத்துக்கொண்டிருக்காது சுதந்திர மக்கள் ஆணைக்குழுவை உருவாக்கிச் செயற்பட்டிருக்க முடியும்.

உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள், நுகேகொடை கற்பழிப்புக் குழு, மாத்தளையின் பாரிய சவக்குழிகள், வன்னியில் மக்கள் நடத்தப்பட்ட விதம் இவைகளுக்கெதிராக பொதுமக்களிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. ஏன் இந்த உணர்வின்மை? இது போருக்குப் பின்னரான ஒரு தோற்றப்பாடா? இந்த அசமந்தத்தனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறிர்கள்?

ப- நான் நினைக்கிறேன் அதற்கு ஒரு காரணம் அங்கு ஒர் அச்சமான சூழல் உருவாக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு 1989லிருந்து நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் நேரடியாக இந்தக் கொடுமைகளை கண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு மேர்வின் சில்வா ஒரு நபரை மரத்தோடு கட்டிவைத்தார். கடைசியில் அந்த நபர் தன்னைத்தானே கட்டிக் கொண்டதாக சொன்னார். எனவே, மக்கள் இங்கு நீதி நியாயமில்லை என்பதை ஊடகங்களுக்கூடாகத் தெளிவாகவே பார்த்து விட்டார்கள்.

மாத்தளை சம்பவத்திலுங்கூட அரசாங்கம் அதன் மீது கூடுதலானளவில் அக்கறை எடுத்துக் கொண்டது. நான் நினைக்கிறேன் மாத்தளை சம்பவம் நடந்தபோது மாத்தளைக்குப் பொறுப்பாகவிருந்த இராணுவ அதிகாரிக்கும் கோத்தபாயவுக்குமிடையில் நிறையப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனாலேயே இந்த விடயத்தைக் கையாள்வதில் அரசாங்கம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டது என்று நினைக்கிறேன்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள்கூட இந்த விடயத்தில் தீவிரமாக இயங்கவில்லை. ஏனைய நாடுகளிலிருந்து வந்த கதைகளை நீங்கள் வாசித்திருந்தால்  தெரிந்திருப்பீர்கள் குவாத்தமாலா, உருகுவே போன்ற நாடுகளில் பாரிய சவக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு உடனடியாகவே வந்திருந்த மக்கள் இங்கே எனது மகன் இருக்கிறானா? இங்கே எனது மகள் இருக்கிறாளா? இங்கே எனது கணவர் இருக்கிறாரா? என்று கேட்டனர். ஆனால் மாத்தளையில் அவ்வாறு நிகழ்ந்ததாக நாம் கேள்விப்படவில்லை. அதற்கு போதியளவு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உரிமைகளுக்காக இயங்கும் அமைப்புகளும் இந்த விடயத்தை விரிவுபடுத்தவில்லை. அதற்காக இயங்கக்கூடிய அமைப்புகளும் இப்போது அங்கு இல்லாத நிலைதான் காணப்படுகிறது. உதாரணமாக சூரியகந்த புலனாய்வுக்கு தலைமைவகித்த அமைப்புகள் அவை நீண்டகாலம் நீடித்திருக்கவில்லை. அன்னையர் முன்னணி இல்லை. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள் இல்லை. நீர்கொழும்பிலுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமைக்கான அமைப்பு போன்ற மிகச் சிறிய மக்கள் அமைப்புகள் மட்டுமே இன்றுள்ளன. ஆனால் இந்த விடயத்தை அவர்களும் பெரிதளவு முன்னணிக்கு கொண்டுவரவில்லை. அங்கு காணப்படுகிற மோசமான சூழலே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் இப்போது இலங்கையிலில்லை. கடந்த வருடமும் நான் அங்கு இருக்கவில்லை. அங்கே நிலவுகிற பயங்கரமான சூழல் குறித்து மக்கள் தயக்கத்துடன் உள்ளனர். அவர்கள் அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லை என்று சொல்வதற்கு முன்னால் பொது மக்கள் மத்தியில் அச்சமும் அதேநேரம் அக்கறையின்மையுமுள்ளதை உணர்கிறேன். உண்மையில் நாங்கள் எதையாவது செய்யாவிட்டால் எந்த மாற்றமும் நிகழாது. அரசாங்கத்திடம் போதிய அதிகாரமிருக்கிறது. போதிய பணம் இருக்கிறது, ஊடகங்கள்மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது.  பாராளுமன்றத்தின் மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் எதைச் செய்தாலும் எந்தப் பயனுமில்லை. அமைதியாக இருப்பதே சிறந்தது. ஆனால் இங்கு காணப்படும் அக்கறையின்மை மிகவும் பயங்கரமானது என்றுதான் நான் நினைக்கிறேன். மக்கள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு ஆபத்தில்லை. இதைத்தான் அவர்கள் வரலாற்று நெடுகிலும் கண்டு வந்துள்ளனர். இதுவும் இன்று இலங்கையில் காணப்படும் ஒரு சவால்மிக்க விடயமாகும். அமைதியாக இருப்பவர்களே சிறந்த மக்கள் என்ற கருத்து அங்கு உருவாகிவிட்டது.

கே- ஆக ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் அங்கு உள்ளதா? இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் சிவில் சமூக இயக்கங்களில்கூட தலைமைத்துவத்தை வகிக்கக்கூடிய அமைப்புகளோ தலைமைத்துவங்களோ காணப்படவில்லை.

1971க் குப் பின்னரான காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் எதுவுமின்றி சிறைக்கைதிகளின் விடுதலைக்கான பிரச்சாரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அது அரசில் கட்சிகளுடன் எந்தவிதத் தொடர்புகளையும் கொண்டிராத வர்த்தக அமைப்பினாலேயே தலைமை தாங்கி நடத்தப்பட்டது. 1990களின் ஆரம்ப காலப் பகுதியில் ஊடக அடக்குமுறைக்கெதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டோம். உண்மையில் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உண்மையான அரசியல் தலைவர்கள் அவர்களுக்குள்ளிருந்துதான் வந்தார்கள். சந்திரிக்காவும் அவரது தலைமையின் கீழ் நிறுவப்பட்ட ஒரு விவசாய அமைப்பொன்றிலிருந்துதான் வந்தார். இன்று நாங்கள் இந்த நிலமையைப் பார்க்க முடியாது. நாங்கள் மக்களை வழிநடாத்துவதற்காக மேய்ப்பர் ஒருவரை காத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறதா? இங்கு எதிர்ப்பு எங்கிருந்து வரும்? ஒரு தேசியரீதியிலான எதிர்ப்பாக மாறக்கூடிய எதிர்ப்பின் உள்ளார்ந்த களங்கள்தான் என்ன?

ப- இது ஒரு சிக்கலான கேள்வி சுதந்த. நாங்கள் மேய்ப்பர் ஒருவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்பவில்லை. அதுதான் உண்மையானதும் கூட. நான் நினைக்கிறேன் 4 அல்லது 5 வருடங்களுக்கு மேலாக ராஜபக்ஸ ஆட்சி செய்வதென்பது மிகத் திறமையான விடயங்களுள் ஒன்று. உண்மையிலேயே அவர் தனக்கு உள்ளார்ந்த சவால்களாக காணப்பட்ட  LTTE, UNP, JVP, SLMC போன்ற அமைப்புகளை முறியடித்துவிட்டார். ஆகவே அடுத்துள்ள சில ஆண்டுகளுக்கும் அவருக்குகந்த ஒரு சூழலை அவர் ஏற்படுத்திவிட்டார். அதன் பயனைத்தான் இன்று அரசாங்கம் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சிங்களம்-தமிழ் ஆகிய இரு சமூகங்களிலுமே ஒரு தலைமுறை கொல்லப்பட்டுவிட்டது. 1971லிருந்து 1990கள் வரை ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கையின் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு இளம் தலைமுறையொன்று அழிக்கப்பட்டுவிட்டது. இந்த யதார்த்தத்துக்குத்தான் நாம் இப்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மீதான படுகொலைகள் காரணமாகவும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை நான் மீண்டும் சொல்லிக் கொள்ளவிரும்புவது, செயற்பாட்டு வாதம் சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இது ஒரு பெரிய சவாலாகும். தனி நபர்களின் உரிமைகளுக்காகவும் சமூக உரிமைகளுக்காகவும் பல்வேறு வழிகளிலும் போராடுகின்ற முன்னேற்றகரமான குழுக்களை ஒன்றாக இணைக்கின்ற சாத்தியங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது ஓர் அரசியல் பகுப்பாய்வு ரீதியான சவால் என்று நான் நினைக்கிறேன். நமது புதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ‘நாங்கள் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம், எயிட்ஸின் பரவலைத் தடுப்பதற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்கள். அந்த இளம் தலைமுறையினர் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களிடம் நாட்டில் ஜனநாயகம் எப்படியுள்ளது எனக் கேட்டால், குற்றப் பிரேரணை பற்றி அது சரியானமுறையில் நிறைவேற்றப்பட்டதா எனக் கேட்டால் அது தொடர்பாக அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் பற்றிக் கேட்டால் அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. எனவே அவர்களுக்கு நான் சொல்லும் விடயம் இதுதான். ஒரு சமூகப் பிரிவின் உரிமைகளுக்காக, ஒரு குழுவின் உரிமைகளுக்காக அல்லது மக்களின் ஒரு பிரிவினரின் உரிமைகளுக்காக மட்டுமே போராடுவது  இலங்கையில் ஒவ்வொரு மனிதனதும் உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்குமான பரந்த போராட்டத்துடன் இணைந்ததாக ஒரு போதும் இருக்காது.

கே- இப்போது நீங்களும் நானும் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். நாங்கள் இளம் தலைமுறையினராக இருந்த போது பல இயக்கங்களை உருவாக்கினோம். இயக்கங்களை வழிநடத்தினோம். நீங்கள் பெண்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தலைமைப் பாத்திரத்தை வகித்தீர்கள். நானும் சமாதானம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான அமைப்பின் சில தலைமைப் பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவை எல்லாம் நாம் இளம் தலைமுறையாக இருந்தபோது நடந்தது. நமது தலைமுறை தலைமைத்துவப் பண்புகளையுடையதாக விளங்கியது. உதாரணமாக அப்போது பிரபல்யமாக விளங்கிய பெர்ணான்டோ சகோதரர்களைக் குறிப்பிடலாம். அத்துடன் மாகாண மட்டங்களிலும் அது காணப்பட்டது. அவர்கள் சிவில் சமூக இயக்கங்களுக்கு உற்சாகமான தலைமைத்துவத்தை வழங்கினார்கள். அவர்கள் தங்களுக்கிடையில் இணைவையும் கொண்டிருந்தனர் எனலாம். ஏனெனில், நாங்கள் 1971 லும் அதற்குப் பின்னரும் ஒரு பொதுவான பண்புகளைக் கொண்ட அரசியல் வரலாற்றையே கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய இளம் தலைமுறையை எடுத்துக்கொண்டால் தலைமைத்துவப் பண்புகளுடன் கூடிய ஒரு இளம் தலைமுறை காணப்படுகிறதா? இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இளம் தலைமுறை இன்று உள்ளதா? அத்தகைய தலைமைத்துவம் தோன்றக்கூடிய சாத்தியங்களாவது இங்குள்ளதா?

ப- நான் நினைக்கிறேன் எங்களுக்கும் பதிய தலைமுறையினருக்குமிடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. அவர்கள் யுத்தமொன்றுக்குள் வாழ நேர்ந்தவர்கள். யுத்தம் இன முரண்பாடு போன்றவற்றுள் வாழ நேர்ந்த அனுபவம் அவர்களுக்கிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அது அவ்வளவாக இல்லை. உண்மையில் அவர்களின் அன்றாட வாழ்வு LTTE யினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பிளவுற்று தளர்ந்த நிலையிலும், குண்டுச் சத்தங்களால் அலைக்கழிக்கபட்டதாகவுமிருந்தது. இன்று அவர்களின் அனைத்துவிதமான அரசியல் புரிதல்களும் முடிவுகளும் யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் என்ற கருத்தினடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் தான் புலிகளை அழித்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. நான் நினைக்கிறேன் இது உண்மையிலேயே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நான் தென்னிலங்கை சிங்கள மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். வட-கிழக்கு தமிழ் மக்களின் கருத்தியல்களும் யுத்தத்தினாலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் LTTE யினரின் அழிவைப் பார்த்து விட்டனர். அவர்களது அன்றாட வாழ்வும் இன்று பல அழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான உள்ளார்ந்த சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லாமலுள்ளது. இந்த நிலையில் அதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே நமது வரலாற்றில் இது ஒரு பின்தங்கிய தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த 2,3 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாம் என்ற எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை.

நாங்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக எங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எமது குரல்களை எழுப்பிக்கொண்டே இருப்போம். நாங்கள் சிறு அளவினதாக இருந்தாலுங்கூட நாங்கள் தாக்கப்படுகின்ற போதிலுங்கூட நாங்கள் நிறுத்தாமல் குரல்களை எழுப்பிக் கொண்டே இருப்போம்.

கே- உங்களுடைய கருத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஒரு முக்கிய விடயமாகவுள்ளது. நாங்கள் யுத்தத்தை எப்படி விளங்கிக் கொள்கிறோம்? தமிழ் மக்களின் மனக்குறைகளை எப்படி விளங்கிக்கொள்வது? இதற்கான ஒரு முழுதளவான அணுகுமுறையை கொண்டிருக்கிறோமா? உளவியல் சார்ந்த அச்சத்தைக் காட்டிலும் இது ஒரு பிரதான பிரச்சினைதானா?

ப- நிச்சயமாக நான் அது குறித்த சந்தேகத்துடன் இருக்கிறேன். உண்மையில் நாங்கள் வடக்கு தெற்குக்கிடையில் இறுகிப்போயுள்ள துருவமயப்படுத்தல் குறித்து தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள-தமிழ் மக்களுக்கிடையில் உள்ள துருவமயப்படலை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நான் நினைக்கிறேன் வட-கிழக்கு மற்றும் தெற்கிலும் பொரளாதாராப் பிரச்சினைகளும் பூதாகரமாகவுள்ளன. ஆனால் அவர்களுக்கு வேறுபல பிரச்சினைகளுமுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முதல் மனித உரிமைகள் தின சந்திப்பொன்றை நடத்தினோம். அதில் வடமத்திய மாகாணத்தின் புத்தளம், மொனராகல, பதுளை போன்ற மாவட்டங்களிலிருந்தும் அம்பாரை போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் காணிப் பிரச்சினை சம்பந்தமாகவே பேசினர். தெற்கில் சாமான்ய மக்களுக்கும் கிராமிய சமூகங்களுக்கும் காணிப் பிரச்சினை இருக்கிறது. உண்மையில் கிராமிய மக்களின் காணி உரிமைகளுக்கான பலமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அது தெற்குக்கு ஒரு விதமாகவும் வட-கிழக்குக்கு வேறுவிதமாகவும் அமைந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது ஒரு அடிப்படையான பிரச்சினை நாம் நமது கவனத்தைப் போதியளவு செலுத்தாத ஒர் அடிப்படையான பிரச்சனை அது.

கே- ஆக, இறுதியாக, எங்களதும் சிவில் சமூகத்தினதும் பணி அரசியல்ரீதியான ஆட்சி மாற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையைக் கொண்டிருப்பதோடு தங்களது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துக் குழுக்களுடனும் இணைவை ஏற்படுத்திக்கொண்டு ஒரு முழுதளவிலான பிரச்சாரத்தை அல்லது ஒர் அணுகுமுறையை கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்த சூழலில் நாம் எதனைச் செய்தாக வேண்டும்?

ப- ஆம், நிச்சயமாக நான் அப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை நாம் பயன்படுத்த வேண்டும். மனித உரிமைகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்ற வெவ்வேறுபட்ட அமைப்புகளையும் ஒன்றிணைத்து இதனை உருவாக்கலாம். அத்துடன் ஜனநாயக ஆட்சியின் பகுதியாகவுள்ள எதிர்ப்பு, ஆட்சேபம் போன்ற கருத்தியல்களையும் நாம் வளர்த்தெடுக்கவேண்டும். எதிர்ப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அச்சப்படக்கூடாது. நாங்கள் எல்லோரும் கடந்த காலங்களில் அதைச் செய்தோம். துரதிஸ்டவசமாக கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் அதைச் செய்யவில்லை. ஆனால் கட்டாயம் நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். மீண்டும் நாங்கள் அதைச் செய்யும்போது அதிகம் புத்திபூர்வமாகவும் ஆக்கத்திறனுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நானும் நீங்களும் நீங்கள் சொன்னதைப் போல அடிக்கட்டுமானங்களை கட்டியெழுப்ப நமது வரலாற்றுக்கு மீளத் திரும்புதல் வேண்டும். அது உண்மையில் சவால் மிக்கதும் கூட.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com