Contact us at: sooddram@gmail.com

 

செய்தியும் சிந்தனையும்(4)

(அபிமன்யு)

செய்தி

 

தஞ்சாவூர் விளார்சாலைப் பகுதியில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை என்னும் அமைப்பால் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முற்பகுதியும் சுற்றுச் சுவரும், இம் மாதம் (நவம்பர், 2013 ) 13ந்திகதி--அதன் திறப்பு விழா நடந்த மூன்றாவது நாளே--தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினரால் தமிழக பொலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.  

சிந்தனை

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பற்றி முன்னர் ஒரு செய்தி வெளிவந்தது. அப்பொழுது அது முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுத்தூண் எனக் கூறப்பட்டது.   உலகத் தமிழர் பேரமைப்பு சார்பாகக் கட்டப்படும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுத்தூண் அமைக்கப்படும் மொத்த நிலத்தில் தன்னுடைய 4500 சதுர அடி நிலத்தை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக துபாயில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் சேலத்தைச் சேர்ந்த அமலா புஷ்பமேரி என்பவர் கொடுத்த புகார் சம்பந்தமாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவன் நடராஜன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த இட விவகாரத்தில் சசிகாலாவின் அண்ணன்  விநோதனின் மகனான டி.வி. மகாதேவன் ஜந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதே அச் செய்தி.

இந்த நிலம் பற்றிய சர்ச்சை தீர்க்கப்பட்டதா, அப்படியானால் எப்படித் தீரக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும், எப்படியோ, உலகத்தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் என்று பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டாலும்--குறிப்பாக யார்யார் இதற்குப் பெரிதும் நிதி உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரியாத நிலையில்-- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடிக்கப்பட்டு இம் மாதம் 8 ந்திகதி திறக்கப்பட்டு, மூன்று நாள் விழாவும் 10 ந் திகதி நடந்தேறியது.  

இக் கட்டிடம் தமிழர்களின் வரலாற்றுப் பதிவு என்று கூறப்பட்டாலும், தமிழன்னையின் சிலை முற்றத்தை அலங்கரித்தாலும், முற்றத்துக்குள் நுழைந்தவுடன், கண்களைக் கவர்வது முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தினால் புலிகள் முறியடிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அவலங்கள் ஒரு நீண்ட சுவரில் வெகு தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கும் காட்சிகளே.

அவயவங்களை இழந்தவர்கள், குண்டு வீச்சுகளுக்குப் அஞ்சிச் செய்வதறியாது திகைக்கும் மக்கள், கம்பி வேலியினால் சூழப்பட்டு இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்ட துயரம் தோய்ந்த முகங்கள் நெஞ்சைப் பிசைகின்றன.--கண்ணீரை வரவழைக்கும் கலை அழகு அது.   

உள் மண்டபத்திற்குள் நுழைந்தால் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்த தமிழகத் தியாகிகள், மற்றும் ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழ் வளர்த்த செம்மல்களின் ஓவியங்கள் ஒரு பகுதியில். மறு பகுதியில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த தீரர்கள் என்ற வரிசையில், அவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் எல்ரிரீஈயைச் சேர்ந்தவர்களின் ஓவியங்கள் மட்டுமே.

இவற்றிற்கு நடுநாயகமாக, தமிழீழத்தின் தந்தை செல்வா என்ற  குறிப்புடன்  இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் படம். அதன் கீழே, தந்தைக்கேற்ற தனயன்,  பாரதி அம்மாள் வேலுப்பிள்ளை, மார்பு காட்டிய மகன் என்ற குறிப்புகளுடன் பிரபாகரனின் பெற்றோர், மகன்கள் ஆகியோரின் ஓவியங்கள். பிரபாகரன் மிஸ்ஸிங் --ஆனால், தந்தைக்கேற்ற தனயன் என்ற படத்தைப் பார்க்கும்போது அது சீருடையுடனான பிரபாகரனின் இளவயதுத் தோற்றம் என்று பார்ப்பவர்கள் எண்ணவும் வாய்ப்புண்டு.

இது விடுதலைப் புலிகள் சார்பானதல்ல, தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளே என முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைப்பதற்கு முன்னின்று செயலாற்றிய பழ.நெடுமாறன் எப்படித்தான் சப்புக் கொட்டினாலும், இது புலிகளை உயர்த்தி வைக்கும் முயற்சியே என்பது கண்காட்சியைப் பார்க்கும் எவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உட்பகுதியில் பிரபாகரன் ஓவியமும் உள்ளது என்று ஒரு தமிழக நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு நெடுமாறன் விட்ட மறுப்பு அறிக்கையில் அவர் தெரிவித்தது:

எந்த ரூபத்திலும் நாம் பிரபாகரனைக் காட்சிப்படுத்தவில்லை. ஈழப்போராட்டத்தில் இறந்து போனவர்களின் ஓவியங்களை மட்டுமே வைத்துள்ளோம். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருக்கிறார். அதனால் அவர் படத்தை வைத்திருக்கிறோம் என்ற செய்தி தவறானது.

சிலசமயங்களில் செய்கையிலும் பார்க்க, அதற்குக் கூறும் காரணங்களே மோசமாக அமைகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். இத்தகைய, புலித்தலைவர் வருவார் என்ற போலி நாடகங்களே, பொய்யான நிலைப்பாடுகளே,  இவர்களது நேர்மைத்திறன் அற்ற செய்கைகளையும்,  அறம்சாராத அரசியலையும், புடம் போட்டுக் காட்டுகிறது. அவர்களது ஏமாற்று அரசியலுக்கு கட்டியம் கூறுகிறது.

தன்னிகரில்லாத் தமிழன், மாவீரன் என்று இவர்கள் போற்றும் பிரபாகரனுக்கு நான்கு வருடங்களாகியும் அஞ்சலி செலுத்தக்கூட முடியாதளவிற்கு நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் இவர்கள், செத்த பாம்பைக் கழுத்தில் கட்டிக் கொண்டு பாம்பு சாகவிலை, உயிருடன் இருக்கிறது என்று அப்பாவித் தமிழகப் பொதுமக்களை மாயையில் தொடர்ந்தும் சிக்க வைத்து தம் வாழ்க்கையை நடாத்துவது இவர்களது பம்மாத்துத்தனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது.

நெடுமாறனுக்குத் துணை போகிறவர்கள் வை.கோபாலசாமி, சீமான், நடராஜன் ஆகியோர். இவர்களுடன் சேர்ந்து கொண்டவர், எமது மறத் தமிழன், தனது இரு மகள்களையும் தமிழகத்தில் கல்வி கற்கவும் அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வேலை செய்யவும் வழிசமைத்த, வாய்வீச்சில் வல்ல, கவிஞர் காசி ஆனந்தன். அவருடைய நீள் கவிதை ஒன்றே சிங்களவர்களைத் தூற்றும் கவிதையே, நான் மேலே குறிப்பிட்ட அவலங்கள் பற்றிய கலைச் செதுக்கல்கள் கொண்ட சுவரின் அடிப்பாகத்தில் தமிழிலும் ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டும் காட்சி தருகிறது.  

நான் சென்ற சமயம் முற்றம் திறப்பு விழா முடிந்த அடுத்த நாள். பின்னர் நடந்த இடிப்பு நிகழ்ச்சிக்கு இரு நாட்களுக்கு முன்னர். திறப்பு விழா முடிவிற்கும், இடிப்பு நிகழ்ச்சி அரங்கேற்றத்திற்கும் இடைப்பட்ட நாள். நெடுமாறன் மண்டபத்தில் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். பார்த்தால் புலம் பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்போல் தெரியும் சிலர் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, தப்பாமல் அதனைப் படம் பிடித்துக் கொள்கிறார்கள். பெருமையாகப் பேசிக்கொள்ள, இலங்கை வாழ் தமிழர்களுடனான தமது ஈடுபாட்டையிட்டுத் தாமே திருப்தி கொள்ள, தமது வீட்டுச் சுவரை அலங்கரிக்க அது உதவுந்தான்!

எப்படியெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் அவலங்களையும் தமக்கு ஒரு சுலபமான அரசியல் வாகனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களின் பணமும், நேரமும், சக்தியும் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட உதவுவதற்குப் பதிலாக, அல்லலுறும் அனாதைகளுக்கும், அவயவங்கள் இழந்தவர்களுக்கும், விதவைகளுக்கும் உதவ வேண்டிய பணமும், பலமும் எப்படியெல்லாம் வீணாக விரயமாகிறது என்பதற்கும் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஒரு நல்ல உதாரணம்.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டுச் சில நாட்களிலேயே அதன் சுற்றுச் சுவரும், முற்பகுதியும் நெடுஞ்சாலைக்குச் சேர்ந்த பகுதி எனக் கோரப்பட்டு, தமிழக காவல்துறையின் துணையுடன் இடிக்கப்பட்டு விடுகிறது. அது கட்டுவதற்கு முன்னரே அப் பகுதியைக் கட்டுவதற்குத் தடை விதித்திருக்கலாம். ஆனால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் இடிக்கப்படுகிறது!

ஏன் முழுவதும் பூர்த்தியான பின்னர் ஒரு பகுதி இடிக்கப்படும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது என்பது புதிர். எதற்கும் அம்மா புராணம் பாடுவதைப் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் புளகாங்கிதம் கொள்ளும் முதலைமைச்சர் ஜெயலலிதாவிற்கு அவர் எதிர்பார்த்திருந்த முக்கியத்துவம் முற்றத்தில் கொடுக்கப்படவில்லை என்ற கோபமும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன், ஆருயிர்த் தோழி சசிகலாவின் கணவர் ம. நடராஜன் ஜெயலலிதாவின் முன்னாள் சகபாடி. பின்னர் பரம விரோதியாக நடாத்தப்பட்டவர். அவர் இந்த முள்ளிவாய்க்கால் நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது ஜெயலலிதாவிற்குப் பிடிக்காமையும் காரணமாக இருக்கலாம்.

மக்களின் உம்மையான நலன் அல்ல, தனிப்பட்ட ஆசாபாசங்களும், விருப்பு வெறுப்புகளும், விரோதங்களும் குரோதங்களுந்தானே இன்று தமிழ்நாட்டு மக்களின் தலைவிதிகளை நிர்ணயிக்கும் அரசியல் செயற்பாட்டுகளின் ஆதாரசுருதிகளாக அமைந்திருக்கின்றன!    

நான் பயணித்த ஓட்டோ சாரதி ஒருவருடன் இந்த இடிப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும்  என்று கேட்டபோது அவர் அளித்த பதில அதுதான் தெரியலை சார்!”.

அந்தக் கட்டுமானத்திற்கான செலவெல்லாம் வீண் விரயமாக்கப்பட்டுவிட்டன. அந்த மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பவர்கள் மட்டுந்தானா ஈழவிடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள்? என்ற நியாயமான கேள்வியும் எழுகின்றது. புலிகளைச் சாராத அவர்களால் படுகொலை செய்யப்பட்ட மற்றைய கட்சிகளினதும் ஆயுத அமைப்புகளினதும் அரசியல்வாதிகள், சமூகசேவையாளர்கள், மற்றும் போராளிகள் ஆகியோரது அர்ப்பணிப்புகள் முற்றாக உதாசீனப்பட்டிருக்கின்றன.

சரித்திரப் புரட்டுகள் செய்யும் சிங்களப்பேரின அரசியல் வாதிகளுக்கு தமிழ்க் குறுந்தேசியவாதிகள் எநத விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபணமாக்கும் கைங்கரியத்தைக் கூசாமல் செய்திருக்கிறார்கள்.  ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த புலிகளின் தலைமையே எப்படி இலங்கையில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்குத் தாமும் காரணமாகினார்கள், அவர்களின் அரசியல் பேதமைகளால் அவர்களது போராளிகளின் அர்ப்பணிப்புகளே அர்த்தமற்றுப் போய்விட்டன என்ற வரலாறு சரியாகவும் நேர்மையாகவும் ஆராயப்படாதவாறு  அமுக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் போக்கு அழிவிற்கே இட்டுச் செல்லும் எனத் தெரிந்தும், வேண்டிய நேரத்தில் அந்தப் போக்கை மாற்ற முனையாது, தமது சொந்த அரசியல் இலாபத்திற்காக பிரபாகரனின்  அனைத்துச் செயல்களுக்கு வக்காலத்து வாங்கியும் துணைபோயும், தமிழர்களின் மீளாத் துயர்களுக்கு இலங்கையில் வாழும் தமிழர்களின் இன்றைய தாழ்வுற்ற நிலைமைக்க நெடுமாறன், வை.கோபாலசாமி உட்பட்ட சில தமிழக அரசியல்வாதிகளும் காரணிகளாவர் என்பது சரித்திர உண்மை. இந்த உண்மையை எதுவித சுயவிசாரணையோ, பச்சாதாபமோ இன்றி தொடர்ந்தும் முற்றும் சுயநலமான அழிவு அரசியலை அவர்கள் நடாத்திக் கொண்டிருப்பது தமிழர்களின் சாபக்கேடாகும்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் கேவலமான சாதிச் சண்டைகள், சாதி அரசியல், எதிலும் எல்லாவற்றிலும் லஞ்சத்தின் கோரத்தாண்டவம், வறுமை, கூவம் நதி சாக்கடையாக மாறியதற்கு இணையாக நாறும் அரசியல் பித்தலாட்டங்கள். இவையெல்லாம் இருக்க இவர்களுக்கு வசதியாக, தமிழக மக்களை உணர்ச்சி வசமாக்கி, ஒரு தலைப்பட்சமான தகவல்களையே அவர்களுக்கு வழங்கி இலகு அரசியல் செய்வதற்குக் கிடைத்திருக்கும் வாகனம் ஈழத் தமிழர்களின் அவலங்கள்!  

இன்றைய தவிர்க்க முடியாத யதார்த்தத்தை மனதில் கொண்டும், அங்கீகரித்தும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் காத்திரமான அரசியல் பகிர்வோடு, இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்ட, தமது வாழ்வாதாரங்கள் உயர்த்தப்பட்ட நிலைமையைக் கோரும் அரசியலை முன்னெடுப்பவர்களையே வடக்கு-கிழக்கு தமிழ்மக்கள் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகளோ, வசதியாக வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர்போல், இலங்கை ஜனாதிபதியை சர்வதேச குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும், தனித்தமிழ் ஈழந்தான் அரசியல் தீர்வு,  இத் தீர்வுக்கு உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களிடமும் ஒரு பொது வாக்கெடுக்க வேண்டும் என்று நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்த அரசியலை முன்னெடுக்கிறார்கள். இப்படி இவர்களே மகிந்த ராஜபக்சாவின் அரசைப் பலப்படுத்துவதோடு, சிங்களப் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கே துணை போகிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் அரசியலையும்  அவலங்களையும் இப்பொழுது முனைப்பாகக் கையில் எடுப்பதன் இன்னுமொரு நோக்கம், காங்கிரஸ் கட்சியை தமிழக மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவது. அதற்கு, காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய அரசுதான் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கான முழுக்காரணம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டும் வேலை அவர்களுக்கு அவசியமாகிறது.

அடுத்த வருடம் (2014ல்) இந்திய மத்திய அரசுக்கான தேர்தலில் யார் யாருடன் கூட்டணி அமைத்து அத்தேர்தலை எதிர்கொள்வது, யார் யாருடன் கூட்டு வைக்க முடியாதவாறு நிலைமைகளைச் சிக்கலாக்குவது  என்பதற்கான தேர்தல் வியூகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கும்,  தமிழகத்தின் உண்மையானதும், முக்கியமானதுமானதுமான அன்றாடப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் தமிழகத்து அரசியல்வாதிகளால் ஈழப் பிரச்னை பயன்படுத்தப்படுகிறது.  

இலங்கை ஜனாதிபதிக்கு இவை ஒரு தலைக் குனிவாகவும். சர்வதேச அரங்கில் கொளரவம் சம்பந்தமான விடயமாக இருந்தாலும், பாருங்கள் இவை நாட்டைப் பிரிக்கிறவர்களின் முயற்சிகள், எனது நாட்டை காப்பாற்றியே தீருவேன், நாட்டைப் பிரிப்பதற்கு நான் என்றைக்குமே இடம் கொடுக்க மாட்டேன் என்ற பிரச்சாரத்தை எடுத்து, அதிகாரப் பரவலாக்கத்தை பூரணமாகக் கொடுக்காமலும், இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்காமலும், சிங்களப் பெருமபான்மை இனத்தின் தளராத ஆதரவுடன்  தொடர்ந்தும் கோலோச்ச வாய்ப்பாக அவருக்கு அமைகிறது.  

ஆக, ஈழத் தமிழர்களின் அவலங்கள் யாவும் இவர்களுக்கு அரசியல் பகடைக் காய்கள். பிச்சைக்காரர்களை முன்னிறுத்தி, அவர்களின் புண்களையையும் அவயவக் குறைவுகளையும் காட்டி ஆதாயம் பண்ணுவோர்களுக்கு ஒப்பாவர் இவர்கள். இவற்றிலெல்லாம் தொடர்ந்தும் சகலவிதமாகவும் பாரதூரமாகப் பாதிக்கப்படுபவர்கள், பாதிக்கப்படப்போவர்கள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் வாழும் சாதாரணத் தமிழ்ப் பொதுமக்களே!

பாவம் அவர்கள்!

பாவப்பட்ட அவர்களது  வாழ்வு, சபிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கை மேம்படும் மார்க்கத்திற்காக தமிழர்கள் மகத்தான மக்கள் சக்தி திருப்பப்படும் நாள் எந்நாளோ?  

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வெளிப்பகுதி வாசலில் நிர்மாணிக்கப்பட்ட சுவரில் பொறிக்கப்பட்டிருந்தது கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளைக் கொண்ட இலச்சினை. முரண்நகையாக, உள் மண்டபத்திலோ தமிழ்த் தேசியம் என்ற பெயரால் குறுகிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகள். வெளியிலோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விசாலமான கண்ணோட்டத்தைத் தெரிவுக்கும் வாசகங்கள்.

அந்த இடிப்பின் போது அநத வாசகங்களைத் தாங்கிய இலச்சினையும் சேர்ந்து இடிக்கப்பட்டு விட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குப் பொருந்தாதுபோலவும், அரசியல் சூதாட்டத்தில் அந்த வாசகங்களும் சிதிலமாக்கப்பட்டு விட்டன!

  
[
25 நவம்பர், 2013
]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com