Contact us at: sooddram@gmail.com

 

நிறைவேற்று ஜனாதிபதி முறையில் மாறும் நிலைப்பாடுகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதோர் ஆட்சி முறையென அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் கருதப்பட்டது. இந்த வாதத்தை முன்வைத்தவர்களில் முதன்மையானவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரபே. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றி நாட்டில் ஒரு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எந்தவொரு சிறுபான்மையினத் தலைவரும் அம் முறைக்காக பரிந்து பேச முன்வருவதில்லை. சிங்கள இனவாதிகளாக உலகமே அறிந்த சிலர் தான் அம்முறையைப் பாதுகாப்பதற்காக முன்வந்துள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை, சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமானது என்று கூறுவதற்கு அன்று அஷ்ரபிடம் பலமானதோர் வாதம் இருந்தது. இம் முறையின் கீழ் நாடே ஒரு தேர்தல் தொகுதியாகிறது. பெரும்பான்மை மக்கள் பிரிந்து பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க முற்படும் நிலையில், அவ் வேட்பாளர்கள் அனைத்து சமூகங்களினதும் ஆதரவை நாடுவர். குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஓரணியில் நின்று வாக்களிக்கும் நிலை ஏற்படும் போது வேட்பாளர்களுக்கு, அவர்களை புறக்கணிக்கவே முடியாது என அஷ்ரப் வாதாடினார். பதவிக்கு வந்த ஜனாதிபதி, அடுத்த முறையும் ஜனாதிபதியாக பதவிக்கு வரவே முயற்சிப்பார். எனவே, அவர் சிறுபான்மையினரை தமது பதவிக் காலத்திலும் புறக்கணிக்க முடியாது.

இதன் காரணமாக அரச அதிகாரிகள் தமக்கு அநீதி இழைக்கும் போது சிறுபான்மையினர் அதைப் பற்றி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அம் முறை சிறுபான்மையினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயற்படும் என்றும் சட்டத்தரணியான அஷ்ரப் மேலும் வாதாடினார். அவர், அதனை நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டினார். 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனோடு விகிதாசார தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் ஒரு கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஆசனங்களைப் பெற தகுதி பெறுவதற்காக ஒரு மாவட்டத்தில் இருந்து பெற வேண்டிய குறைந்தபட்ச வாக்கு வீதம் (வெட்டுப் புள்ளி) 12 ஆக அப்போது இருந்தது.

அந்த நிலையில், தேர்தல்கள் நடைபெற்றால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுக்கு பல மாவட்டங்களில் ஆசனங்களே கிடைக்காது. மக்கள் விடுதலை முன்னணிக்கு எங்குமே ஆசனங்கள் கிடைக்காது. மு.கா.வுக்கு கிழக்கு மாகாணத்துக்கு வெளியே எந்த மாவட்டத்திலும் ஆசனங்கள் கிடைக்காது.

1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணசிங்க பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் ஆரம்ப கட்டத்தில் மு.கா., சிறிமா பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்பட்டது. ஆனால், அக் கட்சிகளிடையேயான தேர்தல் ஒப்பந்தத்தை ஸ்ரீ.ல.சு.க. தமக்குத் தெரியாமலே மாற்றியதாகக் குற்றஞ்சாட்டி அஷ்ரப் அந்தக் கூட்டிலிருந்து விலகினார். பின்னர் அவர், பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருநாள் பேச்சுவார்த்தை அதிகாலை 2 மணிவரையிலும் நீடித்தது. அப்போது அஷ்ரப் இந்த வெட்டுப்புள்ளி விடயத்தை ஒரு நிபந்தனையாக முன்வைத்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் தமக்கு வந்துள்ள சவாலின் பாரதூரத்தை அறிந்திருந்த பிரேமதாச, அஷ்ரபின் கோரிக்கையை ஏற்று வெட்டுப்புள்ளியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க உடன்பட்டார்.

அந்த நள்ளிரவிலேயே பிரேமதாச அதிகாரிகளை எழுப்பி அதற்கான ஆலோசனைகளை வழங்கியதாக அக் காலத்தில் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அஷ்ரபின் இந்த பேரத்தின் காரணமாக, வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது கிழக்கு மாகாணத்துக்கு வெளியிலும் மு.கா., மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் ஆசனங்களைப் பெற முடிந்தது. இது தான் சிறுபான்மையினருக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை, மேன்முறையீட்டு நீதிமன்றமாகிறது என்பதற்கு அஷ்ரப் காட்டிய உதாரணமாகும்.

ஆனால், அந்த குறைந்த வெட்டுப் புள்ளியே பிற்காலத்தில் மு.கா. பல கூறுகளாக பிரிந்து பிளவுபடவும் ஒரு காரணமாக அமைந்தது. அந்தப் பிளவுகளின் காரணமாக ஜனாதிபதிகள், முஸ்லிம்களை புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட்டது. பிளவு மட்டும் தான் நிறைவேற்று ஜனாதிபதிகள், சிறுபான்மையினரை புறக்கணிக்க ஏதுவான ஒரே காரணம் அல்ல. மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனாதிபதிகளின் இனவாதமும் அதற்குக் காரணமாகியது.

போரின் முடிவை அடுத்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷ, சிறுபான்மையினர்களின் வாக்குகளே தேவையில்லை என்று நினைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வாக்குகளை பெற்றார். இந்த நிலை தொடரும் எனவும் அவரும் பேரினவாதிகளும் நினைத்தனர். இனி தமிழர்களும் முஸ்லிம்களும் தமது வாக்கு வங்கியை ஏலத்தில் விட்டு தமது காரியங்களை சாதித்துக் கொள்ள முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அக் காலத்தில் கூறி வந்தார்.

இந்த நிலையும் ராஜபக்ஷகளின் இனவாதமும் காரணமாக அஷ்ரப் கூறியதைப் போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்கு தொடர்ந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றமாகாது போய்விட்டது. இந்த நிலையில், இனவாத மதவாத கும்பல்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களை உடைத்து தகர்க்கும் போதும் அரசாங்கம் கைகட்டி கண்மூடி நின்றது. நிலைமை மோசமாகிவிட்டது, சிறுபான்மையினர், ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகிறார்கள் என ராஜபக்ஷ குடும்பம் உணரும் போது காலம் தாமதித்து இருந்தது.

கடைசி கட்டத்தில் தான் ராஜபக்ஷ அரசாங்கம், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாக இருந்து படையினரினரால் கைப்பற்றிக் கொண்டிருந்த சில காணிகளையாவது கைவிட நினைத்தது. அப்போது தமிழர்களும் முஸ்லிம்களும், ராஜபக்ஷவை தோற்கடிக்க மொத்தமாகவும் உறுதியாகவும் முடிவு செய்திருந்ததால் அது அவர்களுக்கு பயனற்றுப் போய்விட்டது. நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு சிறுபான்மை வாக்குகள் எவ்வளவு பெறுமதியானது என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தலே நன்றாக நாட்டுக்கு எடுத்துக் காட்டியது. உண்மையில் சிறுபான்மையினரே, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தினர். எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர முயற்சிப்பதாகத் தெரியும் சம்பிக்க ரணவக்கவும் அதனை உணர்ந்து இருக்கிறார் போலும்.

தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கில் 1,000 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்த போதும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கப் போவதாக வெளிநாட்டு அமைச்சர் மங்கள் சமரவீர கூறிய போதும் 13 ஆவது அரசியலமைப்புக்கு அப்பால் செல்ல வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை நாடாளுமன்றத்தில் கூறிய போதும் தேசிய கீதத்தை தமிழில் பாடலாம் என ஜனாதிபதி கூறியதாக மனோ கணேசன் கூறிய போதும் சம்பிக்கவோ அவரது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவோ முன்னர் போல் துள்ளிக் குதிக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை எழுந்த போது தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று அடித்துக் கூறிய ஹெல உறுமய இப்போது அதை தமிழ் பகுதிகளில் தமிழில் பாடலாம் தமிழில் பாடினால் தான் தமிழர்களது மனதிலும் தேசப்பற்று வளரும் என்கிற அளவுக்கு வந்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மையினர் வழங்கிய செய்தியே இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். நிறைவேற்று ஜனாதிபதி பதவியை மனதில் வைத்துக் கொண்டு ஹெல உறுமய இவ்வாறு சிறுபான்மையினர் விடயத்தில் மாறும் போது சிறுபான்மையினர், நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றிய தமது நிலைப்பாட்டையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அதனை இப்போது விரும்புவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யவோ அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவோ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றனர்.  கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற பேரினவாத கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டும் எனறு கூச்சலிடுவோரும் மட்டுமே இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரிக்கிறார்கள். அவர்கள் யார் என்பது சிறுபான்மை மக்களுக்குத் தெரியும்.

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வர ஆசைப்படும் சம்பிக்கவின் ஹெல உறுமயவும் அம் முறையை ஆதரித்த போதிலும் கடந்த காலத்தில் அவர் தமது நிலைப்பாட்டை சற்று மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்த்தவர்கள் எல்லோரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்த நிலையில், ஹெல உறுமய அம் முறையை பூரணமாக ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமது விருப்பப்படி செயற்பட முடியாததனால் அல்லது தாம் எதிர்பார்க்கும் உயர் பதவிகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதனாலேயே மைத்திரிபால, சம்பிக்க போன்ற பலர், ராஜபக்ஷ ஆட்சியை வெறுத்தனர்.

அதேவேளை, அப்போது ராஜபக்ஷவின் எதேச்சாதிகார நடவடிக்கைகளின் காரணமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிரான அபிப்பிராயம் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. ராஜபக்ஷ, கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான பிரதான சுலோகமாகியது. எனவே, சம்பிக்கவும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கூறினார். ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவை ஆதரித்தவர்களில் ஹெல உறுமய தவிர்ந்த சகல கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே கூறின. மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் 100 நாட்கள் வேலைத் திட்டத்திலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அம்முறையை இரத்துச்செய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது அது தொடர்பாகவும் மைத்திரிபாலவின் அணியிலேயே கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மாதுளுவாவே சோபித்த தேரின் நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பு போன்றவை நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யத்தான் வேண்டும், ஆனால், இந்தளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதையும் தாம் எதிர்க்க போவதில்லை என்று வாதாடுகின்றன.

நேரடியாகக கூறாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனைத் தான் கூறுகிறது. எனவே தான் ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துள்ளது என்று கூறி, நீதிமன்றம் சென்ற போது அத் திருத்தத்தை பாதுகாக்க கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன், நீதிமன்றத்தில் வாதாட முன்வந்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிறைவேற்று ஜனாதிபதி முறை விடயத்தில் உதாசீனமாகவே இருந்துள்ளது. இவ்வாட்சி முறை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்பதைப் போல் தான் அக் கட்சி நடந்து கொண்டது. ஆனால், ஓர் இனவாதி, நிறைவேற்று ஜனாதிபதியானால் அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பதை கடந்த காலத்தில் உணர்ந்ததாலோ என்னவோ இப்போது கூட்டமைப்பும் அவ்வாட்சி முறைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகவே குதித்துள்ளது போலும்.

இம் முறை முற்றாக ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சகல நிறைவேற்று அதிகாரங்களை வழங்கினாலும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கிடையே பிளவுபட்டு இருந்தால் அவர்களை பிரதமர்களும் மதிக்கப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்து கொண்டதைப் போல் சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஆட்சி முறை வந்தாலும் அவர்களை நாட்டுத் தலைவர்கள் மதிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், சிறுபான்மையினத் தலைவர்களின் பதவி ஆசை அதற்கு எதிர்காலத்தில் இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே.

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com